நடிகர் விஜய் இப்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த ஜூலை மாதம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. படத்தில் விஜய் ஆப் டெவலப்பராக நடிப்பதாக கூறப்படுகிறது. சென்னை மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்துவருகிறது.
படம் பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்படுகிறது. மேலும், ஒரு படத்தில் நடித்த முடித்த பிறகு விஜய் தனது குடும்பத்தினருடன் வெளிநாட்டுக்குச் சுற்றுலா செல்வது வழக்கம். அந்த வகையில், வாரிசு படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் நிறைவடைய உள்ளதால், அதை தொடர்ந்து அவர் குடும்பத்துடன் அமெரிக்கா செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, விஜய் அவரது குடும்பத்தினருடன் முதல் 15 நாள்களில் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும், அதன் பின்னர் லண்டனில் உள்ள அவரது மாமனார் வீட்டுக்குச் செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும், லண்டனிலும் 15 நாள்கள் இருக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அப்போது, விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரும், லண்டனுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், லண்டனில் உள்ள நடிகர் விஜய்யின் மாமனார் வீட்டில் அவருக்கும், விஜய்க்கும் உள்ள கருத்து வேறுபாட்டை சரியாக்க, அவரது குடும்பத்தினர் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யின் தாயார் ஷோபனா கேட்டுக்கொண்டதற்கு இணங்க, விஜய்யின் மாமனார் வீட்டில் இதற்கு ஏற்பாடு செய்திருப்பதாகவும் தெரிகிறது.
சமீபத்தில், எஸ்.ஏ. சந்திரசேகர் தனது 81ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அந்தக் கொண்டாட்டத்தில் அவரது மனைவி ஷோபா கணவருக்கு கேக் ஊட்டும் புகைப்படங்கள் வெளியாகின. அதில் விஜய் கலந்துகொள்ளாதது அப்போது விவாதமாக ஆக்கப்பட்டது. ஆனால் அது அவர்களின் குடும்ப விவகாரம் இதில் தேவையில்லாமல் எதற்கு மற்றவர்கள் தலையிட வேண்டுமென விஜய் ரசிகர்கள் கூறிவந்தனர்.

தொடர்ந்து, எஸ்.ஏ. சந்திரசேகர் அளித்த சமீபத்திய பேட்டி ஒன்றில், “நானும் விஜய்யும் பேசாமல் இருப்பது உண்மைதான். அதை நான் எப்போதுமே மறைத்ததில்லை. ஒருகட்டம்வரைதான் பிள்ளைகள் நமது பேச்சை கேட்பார்கள். பணம் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டால் அவர்களுடைய ஆட்டிட்யூட் மாறிவிடும்.
இது அனைவரது வீட்டிலும் நடக்கக் கூடிய ஒன்றுதான். அப்படி இருக்கும் சூழ்நிலையில் நான் கூறும் சில விஷயங்கள் அவருக்கு பிடிக்காததால் தற்சமயம் இருவரும் அவ்வளவாக பேசிக் கொள்வதில்லை” என்றார். இதனால் விஜய்க்கும், எஸ்.ஏ.சிக்கும் இன்னமும் மனஸ்தாபம் ஓடிக்கொண்டிருப்பது உறுதியானது.