தருமபுர ஆதீன சொத்துகள் ஆக்கிரமிப்பு… அறநிலையத் துறைக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

திருச்சியை சேர்ந்த சாவித்திரி துரைசாமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், “ஆதீன மடங்களில் தொன்மையான பழமையான மிகவும் பிரபலமான மடங்களில் தருமபுர ஆதீன மடமும் ஒன்று.

தமிழ் வளர்ச்சிக்கும், தமிழ் கலாச்சாரங்களை பறைசாற்றும் மடங்களில் இதுவும் ஒன்று. இந்த மடத்திற்கு தமிழகம் முழுவதும் பல்வேறு நிலங்களும், கோவில்களும் உள்ளன. கோவில்களை தருமபுர ஆதீன மடம் பராமரிப்பு செய்து வருகிறது. தற்போது விலை உயர்ந்த பல்வேறு நிலங்கள் மூன்றாம் நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் திருச்சியில் உள்ள உலக புகழ் பெற்ற உய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் கோயில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். இது தேவாரம் பாடிய நாயன்மார்களான சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரது பாடலிலும் இடம்பெற்ற சிறப்புப் பெற்றது.

இந்த கோவிலுக்கு அருகே சுமார் 150 கோடி ரூபாய் மதிப்புள்ள 5 ஏக்கர் நிலங்கள் பலரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இந்த இடம் குறித்து கீழமை நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் ஆதீனத்திற்கு சொந்தம் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், இதுவரையும் ஆக்கிரமிப்பு நபர்களிடமிருந்து இடம் மீட்கப்படவில்லை இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, பல கோடி மதிப்புள்ள தர்மபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இடங்களை மீட்டு ஆக்கிரமிப்பாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என்று சாவித்திரி துரைசாமி தமது மனுவில் கோரி இருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், தருமபுர ஆதீன மடத்திற்கு சொந்தமான இடங்கள் என்பதற்கான பல்வேறு ஆவணங்களை நீதிபதிகள் முன்பு சமர்ப்பிக்கப்பட்டன.

அதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய்துள்ள நபர்கள் மீது ஏன் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? என்று கேள்வி எழுப்பினர்.

அதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட இடங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளது யார்? யார்? என்ற பட்டியலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இதுகுறித்து நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்கும் எனக் கூறி வழக்கை 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.