இமாசலப் பிரதேசம் சிம்லா மாவட்டம் சாப்பா பகுதியில் சமீபத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய நிலச் சரிவு நீரேற்றும் நிலையத்தைக் கடுமையாகப் பாதித்ததால், ரூ 5 கோடி மதிப்பிலான குழாய் இணைப்புகள் சேதமடைந்தன. மணிப்பூர் மாநிலம், நோனீ மாவட்டத்தில் வசிக்கும் 53 மக்கள் மரணமடைந்ததுடன் ஏராளமான சொத்துக்களும் நாசமடைந்தன.

ஒவ்வொரு வருடமும் மழைக் காலத்தின் போது நிலச்சரிவுகள் நிகழ்வது வாடிக்கையான விஷயமே. ஆனால் தட்பவெப்ப மாற்றங்கள் மற்றும் கட்டுமானத் திட்டங்கள் காரணமாகவும் பேரழிவுகள் அதிகரிக்கின்றன என்பதும் கவனிக்கத்தக்கது. 2022 செப்டம்பர் முடிய தேசியப் பேரிடர் அவசரகால மேலாண்மை மையம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி பல்வேறு மாவட்டங்களில் நிகழ்ந்த நிலச்சரிவுகளில் 182 மக்கள் இறந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது.
இது குறித்து ஐ.ஐ.டி பம்பாய் பேராசிரியர் ஸ்ரீதர் பாலசுப்பிரமணியம் கூறுகையில் ‘பெருமழை அல்லது மேக வெடிப்புகளின் போது நிலச்சரிவுகள் நிகழ்வதால் அவை குறித்த உறுதியான மற்றும் நம்பகமான முன்னெச்சரிக்கை தொழில்நுட்பங்கள், திட்டமிடவும், மேலாண்மை செய்யவும், உயிர்களைப் பாதுகாக்கவும் உதவும்’ என்றார்.

இந்தியப் புவியியல் ஆய்வு மைய (ஜிஎஸ்ஐ) விஞ்ஞானிகளும், பிரிட்டிஷ் புவியியல் ஆய்வு மையமும் இணைந்து, இந்தியப் புவியியல் ஆய்வுகளை மேற்கொண்டனர். தமிழகத்தின் நீலகிரி மற்றும் மேற்கு வங்கத்தின் டார்ஜீலிங்க் மாவட்டங்களில் நிலச்சரிவுகளை முன்கணிக்க ஒர் முன்மாதிரியை மதிப்பீடு செய்யத் திட்டமிட்டனர். இந்த மாதிரி வெற்றி பெறும் பட்சத்தில் 2025 -ல் இந்தியாவில் சில பகுதிகளில் அமல்படுத்தப்படும்.
இது குறித்துத் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் கூறுகையில், “நிலச்சரிவுகளின் நம்பகமான முன்கணிப்பின் போது ஏராளமான தொழில்நுட்பச் சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். புயல் அல்லது வெள்ளம் ஆகியவற்றின் முன் கணிப்பு எச்சரிக்கை அமைப்புகளை விடவும், நிலச்சரிவுகளுக்கான முன் கணிப்பு எச்சரிக்கை அமைப்புகள் வித்தியாசமானவை.

தீவிரமாகக் கண்காணிக்காமல் நிலச்சரிவுகளுக்கான முன் கணிப்பு எச்சரிக்கை அமைப்பு சாத்தியமே இல்லை. எனவே புயல், வெள்ளம், வறட்சி ஆகியவற்றுக்கு முன் கணிப்பு எச்சரிக்கை அமைப்பை உருவாக்குவதுபோல், நிலச்சரிவுகளுக்கு நம்மால் முன் கணிப்பு எச்சரிக்கை அமைப்பை எளிதாக உருவாக்க முடியுமா எனத் தெரியவில்லை. முன்கணிப்புகளில் கட்டாயம் வேறுபாடுகள் இருப்பதால், ஜிஎஸ்ஐ-இன் முன்மாதிரி திட்டத்தின் நம்பகத்தன்மை குறித்த சான்றளிப்பை வழங்க இயலாது’’ என்றார்.
இமயமலை, வடகிழக்கு மலைத் தொடர்கள், மேற்குத் தொடர்ச்சி மலை, நீலகிரி, கிழக்குத் தொடர்ச்சிமலை, விந்திய மலைப் பகுதிகளில் ஏற்படும் நீர் – புவியியல் அபாயங்களே இந்தியாவைப் பாதிக்கும் நிலச்சரிவுகளாகும். பனி படர்ந்த பகுதிகள் உள்பட, இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 12.6%, நிலச்சரிவு அபாயங்களால் எளிதாக பாதிக்கப்படக் கூடிய இடங்கள் என ஜிஎஸ்ஐ தெரிவிக்கிறது. 2015-22 ஆண்டுகளில் மொத்தம் 3782 நிலச்சரிவுகள் பல்வேறு மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் ஏற்பட்டுள்ளன எனப் புவி அறிவியல் துறை அமைச்சகம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இதில் அதிபட்சமாக 2239 நிலச்சரிவுகள் கேரளத்திலும், 376 நிலச்சரிவுகள் மேற்கு வங்கத்திலும் நிகழ்ந்துள்ளன.

நாட்டில் நிலச்சரிவுகள் ஏற்பட அடிக்கடி மாறும் தட்ப வெப்ப நிலை, பெருமழை ஆகியவை கணிக்க இயலாதிருப்பதும் ஒரு காரணமாகும். ஆசியா முழுமைக்கும் 2010-21 ஆண்டுகளில் இயற்கைப் பேரிடர்களுக்கு பெருமழையே காரணம் என்றும், இதனைத் தொடர்ந்து நிகழ்ந்த நிலச்சரிவுகளால் சுமார் 1,52,000 மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர் என்றும் என்று ஐடிஎம்சி மற்றும் ஏடிபி அமைப்புகள் கூறுகின்றன.
2013 -ல் உத்தரகாண்டில் பனி உருகியதாலும், மேக வெடிப்பாலும், 5600 மீட்டர் உயரத்திலுள்ள நிலப்பரப்பு மோசமான பேரழிவுக்கு உள்ளானதால் 35 -க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். நிலநடுக்கம் அல்லது கடுமையான மழை உள்ளிட்ட இயற்கைக் காரணிகளே நிலச்சரிவுகளுக்குக் காரணம் என்றாலும், சாலைகள், கட்டுமானங்கள், ரயில்வே, சுரங்கம், கல் குவாரிகள், புனல்மின் நிலைப் பணிகள் மண்ணையும், சரளையையும் தளர்த்துவதால், மலைகளில் மிக எளிதாக நிலரச்சரிவுகள் ஏற்படுகின்றன என 2013 தேசியப் பேரிடர் மேலாண்மை அறிக்கை தெரிவிக்கிறது.
எனவே அதிகாரிகள் பணிகளைத் தொடங்கும்முன் மலைச்சரிவுகளில் அபாய பகுப்பாய்வுகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும். இது தொடர்பான வழிகாட்டுதல்கள் 2009 -லேயே வழங்கப்பட்டாலும், நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் அவை முழுமையாகப் பின்பற்றப்படவில்லை.

2013 பேரிடருக்குப் பிறகு ஜிஎஸ்ஐ தேசிய நிலச்சரிவு உணர்திறன் வரைபடத்தை (என்எல்எஸ்எம்) அறிமுகப்படுத்தியது. மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் நிலச்சரிவுக்கு உள்ளாகும் சாத்தியமுள்ள மொத்த இலக்குப் பகுதியான 420,000 சதுர கிமீ-இல் 85% அதாவது 363,000 சதுர கிமீ பரப்பளவின் வரைபடத்தை ஜிஎஸ்ஐ தயாரித்தது. 86,459 நிலச்சரிவுகள் தொடர்பான தரவுகள் சேகரிக்கப்பட்டன.
இந்தியாவில் பருவகால மழைப்பொழிவு மே கடைசி மற்றும் ஜூன் தொடக்கத்தில் ஆரம்பமாகும். ஆனால் கடந்த இரு ஆண்டுகளில் தட்பவெப்ப நிலை மாற்றங்களால் மழைப்பொழிவு சீராக இல்லை. வரும் ஆண்டுகளில் பருவகால மழைப் பொழிவில் நிச்சயமற்ற தன்மைகள் அதிகரிக்கவே செய்யும். பருவகால மழையின் குறுகிய மற்றும் நீண்ட கால முன் கணிப்பு சிக்கலான விஷயம். இதற்கான சரியான மற்றும் துல்லியமான பதில் ஒவ்வொரு முறையும் கிடைக்க வாய்ப்பில்லை.
தட்பவெப்ப நிலை முன் கணிப்புக்குப் பொறுப்பு வகிக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் 2021 வரை நீண்ட கால முன் கணிப்பு முறையை (Long Range Forecast Method) பயன்படுத்தியது. ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான மொத்த மழை அளவை ஏப்ரல் மூன்றாவது வாரம் மற்றும் ஜூன் இரண்டாவது வாரம் என இரு கட்டங்களாக முன் கணித்தது. இந்த முன் கணிப்பு புள்ளிவிவர மாதிரியின் அடிப்படை என்பதால் எல் நினோ (El Nino) அல்லது லா நினா (La Nina) போன்று வரலாற்றுப் பருவகால தரவு மற்றும் வளிமண்டல வடிவங்களை நம்பியிருக்கும்.

மேற்கண்ட மாதிரியைப் பயன்படுத்திய பருவகால முன் கணிப்புகள் பல ஆண்டுகளாகவே தவறிப் போனதை இந்தியா டுடே ஆய்வு தெரிவித்தது. எனவே பருவகால முன் கணிப்பை மேம்படுத்த 2021-இல் ஐஎம்டி பூனேவிலுள்ள இந்திய வெப்ப மண்டல வானிலை ஆய்வு மையம் உருவாக்கிய, மல்டி மாடல் என்செம்பிள் (Multi-Model Ensemble – MME) mausam.imd.gov.in முன்கணிப்பு அமைப்பைப் பயன்படுத்தியது.
பசிஃபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்களின் மேற்பரப்பு வெப்பநிலை அடிப்படையில் இந்த மாதிரி நாடு முழுமைக்குமான பருவகால முன்கணிப்பை வழங்குகிறது.
2018 -ல் கோவையிலுள்ள அம்ருதா விஷ்வ வித்யாபீடம் நிகழ் நேர நிலச்சரிவு கண்காணிப்பு மற்றும் முன் கூட்டியே எச்சரிக்கும் அமைப்புகளை மூணாறு (கேரளம்) மற்றும் சிக்கிம் மாநிலங்களில் நிறுவியது. இந்தப் பல் உணர்வி அடிப்படையிலான அமைப்பு, மழை ஊடுருவல், நிலத்தடி நீரின் அழுத்தம், அதிர்வுகள், அசைவுகள் மற்றும் சரிவுகளின் நிலையாமை ஆகியவற்றைப் பகுப்பாய்வு செய்யும்.
மண்டி இந்தியத் தொழில்நுட்ப நிலையம் (IIT-Mandi) மேற்பரப்பு-நிலை-இயக்க-உணர்வி- (surface-level-motion-sensor) அடிப்படையிலான நிலச்சரிவு முன் கணிப்பு எச்சரிக்கை அமைப்புகளை இமாசலப் பிரதேசம், மண்டி மாவட்டத்திலுள்ள 10 இடங்களில் நிறுவியுள்ளது. இக்கருவி வானிலை வரையறைகள், மண் ஈரப்பதம், மண் அசைவு, மழையின் தீவிரம் ஆகியவற்றைச் சேகரிக்கும். இக்கருவி நிலச்சரிவுக்கு வழிவகுக்கும் பூமி இடப்பெயர்வைக் கண்டுபிடித்து அதிகாரிகளை எச்சரிக்கும்.

2018 ல் உணர்விகள் மண்டி – ஜோகீந்தர் நெடுஞ்சாலையில் வரவிருக்கும் நிலச்சரிவு குறித்த அபாயத்தை அதிகாரிகளுக்கு முன் கூட்டியே தெரிவித்து எச்சரிக்கை விடுத்தது. இதன் காரணமாக காவல் துறை சாலையிலிருந்து வாகனங்களை அப்புறப்படுத்தியும், வேறு பாதையில் திருப்பி விட்டும், மிகப் பெரிய விபத்தைத் தடுத்தனர்.
நாடு முழுவதும் ஒவ்வொரு வருடமும் நிலச்சரிவுகளால் ஏற்படும் பேரழிவுகளைக் குறைக்க அரசு மற்றும் தனியார் அமைப்புகள் முன் எச்சரிக்கைக் கருவிகளை உருவாக்குவதில் தீவிரம் செலுத்தி வருகின்றன. இருப்பினும் தேவையான அளவுக்கு இவை இன்னும் அதிக எண்ணிக்கையில் நிறுவப்பட்டால் மட்டுமே எதிர்காலத்தில் நிலச்சரிவு பேரிடர்களால் ஏற்படும் பேரழிவைத் தடுக்க முடியும்.
– ஜனனி ரமேஷ்