தொழிலாளர் நலனுக்கான புதிய சட்டவிதிகள் உருவாக்கம் – அமைச்சர் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஆலோசனை

சென்னை: மாறிவரும் காலச்சூழலுக்கு ஏற்ப பல்வேறு தொழிலாளர் நலச் சட்டங்களில் மாற்றங்கள் மேற்கொள்வது, தொழிலாளர் நலனுக்கான புதிய சட்ட விதிகள் உருவாக்குவது குறித்து அமைச்சர் சி.வி. கணேசன் தலைமையில் நடைபெற்ற தொழிலாளர் ஆலோசனை வாரிய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தொழிலாளர் நலத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில், 60-வது மாநில தொழிலாளர் வாரிய ஆலோசனை கூட்டம்,தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நலவாரிய கருத்தரங்கு கூடத்தில் நடைபெற்றது.

இதில், தொழிலாளர் நலத்துறை செயலர் முகமது நசிமுதீன், மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகதலைவர், கைத்தறித்துறை இயக்குநர், துணிநூல் துறை இயக்குநர், தொழிலாளர் துறை ஆணையர் அதுல் ஆனந்த், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை இயக்குநர் எம்.வி.செந்தில்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும், தென்னிந்திய வேலையளிப்போர் கூட்டமைப்பு, தமிழ்நாடு தோட்டத் தொழிலாளர்கள் சங்கம், தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம், தமிழ்நாடு சிறு மற்றும்குறுந்தொழில்கள் சங்கம், அனைத்திந்திய உற்பத்தியாளர் அமைப்பு, அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள், தொமுச பேரவை (எல்பிஎப்), தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன், அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ், இந்திய தொழிற்சங்கங்களின் மத்திய அமைப்பு (சிஐடியு), இந்து மஸ்தூர்சபா, விசிக ஆகிய தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள்,சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.சுதர்சனம்,க.செல்வராஜ், சபா.ராஜேந்திரன்,தமிழரசி ஆகியோரும் தொழிலாளர் துறையின் மூத்த அதிகாரிகளும் பங்கேற்றனர்.

வேலையளிப்போர் மற்றும்தொழிலாளர்களால் எதிர்கொள்ளப்படும் சிக்கல்கள், பல்வேறு நிறுவனங்கள், தொழில்கள், தொழிற்சாலைகள், தோட்ட நிறுவனங்கள் ஆகியவற்றின் செயல்பாட்டில் எழும் பிரச்சினைகள், தற்போது மாறிவரும் காலச்சூழலுக்கு ஏற்ப பல்வேறு தொழிலாளர் நலச் சட்டங்களில் மாற்றம் செய்தல், தொழிலாளர் நலன் மற்றும் தொழில்அமைதி காக்க புதிய சட்ட விதிகள்உருவாக்குதல் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இணையதள வசதி:

தொழிலாளர் துறை வெளியிட்ட மற்றொரு செய்திக்குறிப்பு:

தமிழக அரசின் தொழிலாளர் துறையின்கீழ், 18 அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்கள் செயல்பட்டு வருகின்றன. அமைப்புசாரா தொழிலாளர்கள் பதிவு செய்யும் முறையை எளிமைப்படுத்தவும், நலத்திட்ட உதவிகளை விரைவாக பெறவும் இணையதள வசதி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதள குறை தீர்வு வசதியை அமைச்சர் சி.வி.கணேசன் நேற்று தொடங்கி வைத்தார்.

திமுக அரசு பொறுப்பேற்ற பின், இணையதளம் வாயிலாக 10 லட்சத்து 81,137 அமைப்புசாரா தொழிலாளர்கள், 18 அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியங்களில் பதிவு செய்துள்ளனர். இதில் 6 லட்சத்து 71,355 பயனாளிகளுக்கு ரூ.524.99 கோடி நலத்திட்ட உதவியாக வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 18 அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் இதுவரை 40 லட்சம் தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். இணையதள குறைதீர் வசதி மூலம்,தொழிலாளர்கள் பதிவு, புதுப்பித்தல், உதவித்தொகை கோரும் விண்ணப்பங்களின் மீதான நிலையை தெரிந்து கொள்ளவும், குறுஞ்செய்தி மூலம் குறைதீர் நிலையை அறிந்து கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.