சென்னை: தமிழக விவசாயிகள் பயன்பெறும் வகையில் பயிர் காப்பீடு திட்டத்துக்கு ரூ.2,339 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. வரும்நவ.15ம் தேதிக்குள் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யுமாறு வேளாண் உற்பத்தி ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக வேளாண் உற்பத்தி ஆணையர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வெள்ளம், புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களால் பயிர்கள் பாதிக்கப்படும்போது, தமிழக விவசாயிகளின் நிதிச்சுமையைக் குறைக்க முதல்வர் ஸ்டாலின் 2022-23-ம் ஆண்டில் பயிர் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்துவதற்காக, மாநில அரசின் காப்பீட்டுக் கட்டணமானியமாக ரூ.2,339 கோடி நிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார்.
தற்போது அனைத்து மாவட்டங்களிலும் சம்பா நெல் சாகுபடி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. சம்பா, தாளடி, பிசானப் பருவத்தில் இதுவரை 24.13 லட்சம் ஏக்கர் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் 5.90 லட்சம் ஏக்கர் அளவுக்கு 10.38 லட்சம் விவசாயிகளால் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், மதுரை,புதுக்கோட்டை, கரூர், சேலம், திருப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, ராமநாதபுரம், திருச்சி,அரியலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தருமபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சிவகங்கை, கடலூர், திருவள்ளூர், ஈரோடு மாவட்டங்களில் சம்பா பருவ நெற்பயிரை காப்பீடு செய்வதற்கான கடைசி நாள் நவ.15 ஆகும்.
நெல் நடவு தாமதம்: கன்னியாகுமரி, திண்டுக்கல், விருதுநகர், நாமக்கல், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் 2-ம் போக நெல் நடவுசற்று தாமதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதால், இம்மாவட்ட நெல் விவசாயிகள் டிச.15-ம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ளலாம்.
பயிர்க்கடன் பெற்றுள்ள விவசாயிகளாக இருந்தால், தொடர்புடைய தொடக்க வேளாண்மை கூட்டுறவுகடன் சங்கம் அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலும், பயிர்க்கடன் பெறாத இதர விவசாயிகள் தங்கள் அருகில் உள்ள பொது சேவை மையங்களிலும் (இ-சேவை மையங்கள்) காப்பீடு செய்து கொள்ளலாம். மேலும், https://pmfby.gov.in என்ற இணையதளத்தில் ‘விவசாயிகள் கார்னர்’ எனும் பக்கத்தில் விவசாயிகள் நேரடியாகவும் காப்பீடு செய்து கொள்ளலாம்.
என்னென்ன ஆவணங்கள்?: காப்பீடு செய்ய முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலரிடம் இருந்து பெற்ற அடங்கல் அல்லது இ-அடங்கல் அல்லது விதைப்பு அறிக்கை, வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல்கள் ஆகிய ஆவணங்கள் மற்றும் செலுத்த வேண்டிய காப்பீட்டுக் கட்டணத் தொகை ஆகியவற்றுடன் செல்ல வேண்டும்.
காப்பீட்டு திட்டத்தில் இணைவதற்கு விவசாயிகளின் நிதிச்சுமையை குறைக்க, காப்பீட்டுக் கட்டணத்தில் பெரும் பங்கை மாநில அரசும், மத்திய அரசும் செலுத்திவிடும் என்பதால், விவசாயிகள் சம்பா நெல், மக்காச்சோளத்துக்கு காப்பீட்டுத் தொகையில் 1.5 சதவீத தொகையையும், பருத்தி, வெங்காயத்துக்கு காப்பீட்டுத் தொகையில் 5 சதவீத தொகையையும் செலுத்தினால் போதுமானது.
வங்கிகளில் பெறலாம்: விவசாயிகளின் பங்களிப்புக் கட்டணத்தை செலுத்தியதற்கான ரசீதை பொது சேவை மையங்கள் அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்றுக் கொள்ளலாம். தற்போது, மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால், புயல், வெள்ளத்தால் பயிர் சேதம் அடைந்த பிறகு காப்பீடு செய்ய இயலாது.
எனவே, விவசாயிகள் அனைவரும் கடைசி தேதி வரை காத்திருக்காமல், முன்னதாகவே தங்களது சம்பா நெல் பயிரை காப்பீடுசெய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறுஅதில் கூறப்பட்டுள்ளது. விவசாயிகள்கடைசி தேதி வரை காத்திருக்காமல், முன்னதாகவே சம்பா நெல் பயிரை காப்பீடு செய்து கொள்ள வேண்டும்