இந்தாண்டில் மட்டும் பாகிஸ்தானில் இருந்து 266 ‘ட்ரோன்’கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவல்: பிஎஸ்எப் டைரக்டர் தகவல்

புதுடெல்லி: இந்தாண்டு மட்டும் பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் 266 ட்ரோன்கள் ஊடுருவியதாக எல்லைப் பாதுகாப்பு படை அதிகாரி தெரிவித்தார். பாகிஸ்தான் – இந்திய எல்லையில் பஞ்சாப் மற்றும் ஜம்மு எல்லைப் பகுதிக்குள் பாகிஸ்தானில் இருந்து அவ்வப்போது ஆளில்லா விமானங்களில் ஊடுருவல் அதிகமாக உள்ளது. அவ்வப்போது இந்திய பாதுகாப்பு படையினர் அந்த ட்ரோன்களை சுட்டு வீழ்த்தினாலும் கூட, பாகிஸ்தானில் இருந்து மேலும் மேலும் ட்ரோன்கள் பறக்கவிடப்படுகின்றன.

அந்த ட்ரோன்களில் வெடிபொருட்களும், ரகசிய பொருட்களும் இந்திய எல்லையில் இருக்கும் தீவிரவாத கும்பலுக்கு அனுப்பி வைக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எஃப்) டைரக்டர் பங்கஜ் குமார் சிங் கூறுகையில், ‘2022ம் ஆண்டில் மட்டும் பாகிஸ்தானில் இருந்து வரும் ட்ரோன்கள் மூலம் போதைப்பொருள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை அனுப்புவது கணிசமாக அதிகரித்துள்ளது.

சுட்டு வீழ்த்தப்படும் ட்ரோன்களை தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளோம். கடந்த 2020ம் ஆண்டில் இந்திய-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் 79 ட்ரோன்களை பிஎஸ்எஃப் கண்டறிந்துள்ளது. 2021ம் ஆண்டில், 109 ஆக அதிகரித்துள்ளது; இந்த ஆண்டு மட்டும் 266 ஆக அதிகரித்துள்ளது. இவற்றில் 215 ட்ரோன்கள் பஞ்சாப் எல்லையிலும், 22 ட்ரோன்கள் ஜம்மு எல்லையிலும் ஊடுருவின’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.