கனமழை காரணமாக சில இடங்களில் கல்வி நிலையங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. அதிலும் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பெய்த கனமழை பல்வேறு இடங்களை புரட்டிப்போட்டுவிட்டது. பலரும் உடமைகளை இழந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில், பயிர்கள் மூழ்கியதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
ஆறு மணி நேர அதீத கனமழையால் 44 சென்டிமீட்டர் மழை பதிவானது. பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. மாவட்டம் முழுவதும் 70 ஆயிரம் ஏக்கர் சம்பா சாகுபடி மழை நீரில் மூழ்கியுள்ளது.
மழைநீரால் பாதிக்கப்பட்ட தாழ்வான பகுதி மக்கள் அரசின் 36 நிவாரண முகாம்களில் 17,000 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடலோர பகுதிகளைச் சேர்ந்த 20,000 மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று ஒருநாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவிட்டுள்ளார்.
அதே போல், மழையின் காரணமாக குன்றத்தூர் தாலுக்காவில் உள்ள மாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
newstm.in