அமெரிக்காவில் படிக்க ஆர்வம் காட்டும் இந்திய மாணவர்கள்- ஓப்பன் டோர்ஸ் அறிக்கை!

தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, அதிக எண்ணிக்கையிலான‌ இந்திய மாணவர்கள் உயர்கல்வி பயில்வதற்காக அமெரிக்காவை தேர்ந்தெடுத்துள்ளனர். இன்று வெளியிடப்பட்ட “ஓபன் டோர்ஸ் அறிக்கை”‍‍‍யின் படி; கிட்டத்தட்ட இரண்டு லட்சம் இந்திய மாணவர்கள் 2021-22 கல்வியாண்டில் உயர்கல்வி கற்பதற்காக அமெரிக்காவைத் தேர்ந்தெடுத்துள்ளனர். முந்தைய ஆண்டை விட இது 19 சதவீதம் அதிகமாகும். பத்து லட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவில் படிக்கிறார்கள். அவர்களில் சுமார் 21 சதவீதம் பேர் இந்திய மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அரசின் பொது உறவு நய அமைச்சக ஆலோசகர் குளோரியா பெர்பெனா, இது குறித்து கூறுகையில்; மிக அதிக எண்ணிக்கையிலான‌ இந்திய மாணவர்கள் உயர் கல்வி பயில அமெரிக்காவைத் தேர்ந்தெடுத்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்திய மாணவர்களும் அவர்களின் பெற்றோரும் அமெரிக்க கல்வியின் மதிப்பை அங்கீகரிக்கிறார்கள் என்பது இதன் மூலமாக தெளிவாகிறது.

அமெரிக்க உயர் கல்வி, உலகின் சவால்களைச் சமாளிக்க தேவையான திறன்களை வழங்கி, மாண‌வர்களைத் தயார்படுத்துகிறது. மேலும், செயற்கை நுண்ணறிவு, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், தொழில் முனைதல், மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் போன்றவற்றில் எதிர்கால வாய்ப்புகளையும் வழங்குகிறது என்று குறிப்பிட்டார்.

இந்திய மாணவர்களுக்கு உதவுவதற்காக, புதுதில்லி, சென்னை, கொல்கத்தா, பெங்களூர், அகமதாபாத், மும்பை, மற்றும் ஹைதராபாத் (இரண்டு இடங்கள்) என்று இந்தியா முழுவதிலும் மொத்தம் எட்டு நகரங்களில் அமெரிக்கக் கல்வி ஆலோசனை மையங்களை அமெரிக்க வெளியுறவுத் துறை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்கா சென்று உயர் கல்வி கற்க விரும்பும் மாணவர்களுக்கு காணொலி மற்றும் நேரடி இலவச ஆலோசனை சேவைகளை இந்த மையங்கள் வழங்குகின்றன.

தேசிய விளையாட்டு விருதுகள்: பிரக்ஞானந்தாவுக்கு அர்ஜூனா விருது!

அமெரிக்காவில் படிப்பதற்கான வாய்ப்புகளைப் பற்றிய துல்லியமான, விரிவான மற்றும் முழுமையான தகவல்களை இந்த எட்டு மையங்களில் பணியாற்றும் அமெரிக்கக் கல்வி ஆலோசகர்கள் வழங்கி வருகிறார்கள். இதன் பயனாக, நான்காயிரம் அங்கீகரிக்கப்பட்ட அமெரிக்க உயர் கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் படிப்புகளில் தங்களுக்குப் பொருத்தமான, சிறந்த படிப்பினை இந்திய மாணவர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும்.

அமெரிக்காவில் உயர் கல்வி கற்பது பற்றிய கூடுதல் தகவல்கள் தேவைப்படும் மாணவர்களும், அவர்களது குடும்பத்தினரும் EducationUSAIndia எனும் செயலியை தங்கள் ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு சாதனங்களில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த செயலியின் மூலமாக அமெரிக்காவில் உள்ள கல்லூரிகளின் சேர்க்கை விண்ணப்ப வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம். அமெரிக்க உயர்கல்வியில் சேர்வதற்கான எளிமையான முதல் படி இதுவாகும். அல்லது https://educationusa.state.gov/country/in எனும் இணையதளத்தை அவர்கள் காணலாம்.

“ஓப்பன் டோர்ஸ் “ என்றால் என்ன?

அமெரிக்காவில் இயங்கும் ஐஐஈ எனப்படும் சர்வதேச கல்வி நிறுவனம் “ஓப்பன் டோர்ஸ்” என்ற அறிக்கையை வெளியிடுகிறது. ஐஐஇ 1919ம் ஆண்டில் நிறுவப்பட்டது. அப்போது முதல், அமெரிக்காவில் உள்ள சர்வதேச மாணவர்கள் குறித்த வருடாந்திர புள்ளிவிவர கணக்கெடுப்பை ஐஐஇ நடத்தி வருகிறது. மேலும், 1972 முதல் அமெரிக்க வெளியுறவுத் துறையின் கல்வி மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான பணியகத்துடன் இணைந்து இது செயல்பட்டு வருகிறது.

அது மட்டுமில்லாமல், அமெரிக்க பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆங்கிலக் கல்வி திட்டங்களில் சேர்ந்துள்ள சர்வதேச மாணவர்கள் எண்ணிக்கை குறித்த விபரங்களையும் வெளியிடுகிறது. ஓபன் டோர்ஸ் 2022 அறிக்கையில் அமெரிக்காவில் உள்ள அமெரிக்க உயர் கல்வி நிறுவனங்களில் சேர்ந்த சர்வதேச மாணவர்கள் மற்றும் உலகின் பல்வேறு நாடுகளிலும் இருந்து ஆன்லைன் மூலம் பயிலும் சர்வதேச மாணவர்கள் குறித்த விபரங்களும், 2021-22ல் விருப்ப நடைமுறை பயிற்சி (ஓ.பி.டி) பெற்றவர்களின் விபரங்களும் இடம் பெற்றுள்ளன. கூடுதல் தரவுகள், வரைகலை தகவல்கள் மற்றும் மேலும் விபரங்களுக்கு www.iie.org/OpenDoors எனும் இணையதளத்தினைப் பார்வையிடவும்.

அமெரிக்க வெளியுறவுத் துறையின் கல்வி மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான பணியகம் (ஈ.சி.ஏ) கல்வி, கலாச்சாரம், விளையாட்டு, தொழில்முறை மற்றும் தனியார் துறை பரிமாற்றங்கள், பொது-தனியார் கூட்டுகள் மற்றும் வழிகாட்டுதல் திட்டங்கள் மூலம் அமெரிக்க மக்களுக்கும் பிற நாட்டு மக்களுக்கும் இடையில் உறவுகளை உருவாக்கிப் பேணி வருகிறது. முதன்மை வாய்ந்த ஃபுல்பிரைட் திட்டம் மற்றும் சர்வதேச பார்வையாளர் தலைமைத்துவத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பரிமாற்றத் திட்டங்களின் கீழ் சுமார் 50,000 பங்கேற்பாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் பயன் பெற்று வருகிறார்கள்.

நிதித் தேவை உள்ள அமெரிக்க இளநிலைப் பட்டதாரிகளுக்கான பெஞ்சமின் ஏ. கில்மன் உதவித் தொகை திட்டம், வெளிநாட்டில் அமெரிக்க அயல் மொழிப் படிப்புக்கு உதவும் மொழிப் புலமை உதவித் திட்டம், மற்றும் உலகெங்கிலும் உள்ள 400க்கும் மேற்பட்ட ஆலோசனை மையங்களைக் கொண்ட எஜுகேஷன் யுஎஸ்ஏ நெட்வொர்க் ஆகியவற்றையும் கல்வி மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான பணியகம் செயல்படுத்தி வருகிறது. அமெரிக்காவில் உயர் கல்வி கற்க விரும்பும் உலகெங்கிலும் உள்ள மாணவர்களுக்குத் தேவையான தகவல்களை இந்த ஆலோசனை மையங்கள் வழங்குகின்றன.

உலகளாவிய கோவிட்-19 பெருந்தொற்று தொடங்கியதிலிருந்து, அதன் பரிமாற்றத் திட்டங்களை பகுதி அல்லது முழுநேர காணொலி வசதிகள் கொண்டவையாக மாற்றி அமைத்தும், ஒத்திவைத்தும் சில மாற்றங்களை ஈ.சி.ஏ செய்துள்ளது. அமெரிக்க அரசின் கல்வி மற்றும் கலாசார பரிமாற்ற நடவடிக்கைகள் பற்றிய தகவல்களுக்கு eca.state.gov எனும் இணையதள உதவுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.