திரும்ப ஃபார்முக்கு வந்தாச்சு… திமுகவை நறுக்குனு கேட்ட குஷ்பு… பீஸ்ட் மூடில் தமிழக பாஜக!

அதிமுகவில் உட்கட்சி பூசல் உச்சம் தொட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சியாக சரியாக செயல்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த விரும்பும் பாஜக, ஆளும் அரசிற்கு எதிராக அவ்வப்போது ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில் ஆவின் பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்விற்கு எதிராக இன்று தமிழகம் முழுவதும் அக்கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

சென்னை அடையாறில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை குஷ்பு கலந்து கொண்டு பேசினார். அப்போது, பொதுமக்களை பற்றி அக்கறை இல்லாமல் திமுக அரசு செயல்பட்டு வருகிறது. பாஜக பெண் நிர்வாகிகள் பற்றி திமுக நிர்வாகி சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அதற்கு கட்சி தலைவர் என்ற வகையில் வருத்தம் தெரிவித்தாரா? மன்னிப்பு கேட்டாரா? எதுவும் இல்லை. ஏனெனில் 5 ஆண்டுகள் நாங்கள் தான் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கப் போகிறோம்.

அதன்பிறகு இருக்கப் போவதில்லை என்று தெளிவாக தெரிந்து வைத்திருக்கிறார்கள். இதையொட்டி இந்த 5 ஆண்டுகளும் எவ்வளவு சம்பாதிக்க முடியுமோ? அவ்வளவு சம்பாதிக்க முடிவு செய்துள்ளனர். ’திராவிட மாடல்’ என்று தொடர்ந்து பேசி வருகிறார்கள். அப்படியென்றால் என்ன? பெண்களை அவதூறாக பேசுவது, பால் விலை, மின் கட்டணத்தை அதிகப்படுத்துவது, மக்களை கஷ்டப்படுத்துவது தான் உங்கள் மாடலா?

யார் காதில் பூ சுற்றப் பார்க்கிறீர்கள்? எங்களின் இந்த போராட்டம் இன்றுடன் முடிவடையப் போவதில்லை என்று கூறினார். பிரதமர் மோடி எங்கு சென்றாலும் தமிழ் மொழியை பற்றி பெருமையாக பேசி வருகிறார். இதே காங்கிரஸ் கட்சியை எடுத்துக் கொள்ளுங்கள். ராகுல் காந்திக்கு தமிழ் என்ற வார்த்தையை கூட சரியாக சொல்லத் தெரியாது. மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்களின் வழிகாட்டுதலின்படி நாங்கள் மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறோம்.

இந்தி எதிர்ப்பு என்று தொடர்ந்து எதிர்ப்பை காட்டி வருகிறீர்கள். ஏன் திமுகவில் யாரும் இந்தி பேசுவதில்லையா? அவர்கள் வீட்டில் யாரும் இந்தி கற்கவில்லையா? ஆட்சியில் இருக்கும் போது கூட திமுகவினர் நடத்தி வரும் சுமார் 45 பள்ளிகள், கல்லூரிகளில் இந்தி கட்டாய மொழியாக இருக்கிறது. டாக்டர் கலைஞர் கொண்டு வந்ததை போல சமச்சீர் கல்வியை கொண்டு வாருங்கள்.

நவோதயா பள்ளிகளை கொண்டு வாருங்கள். ஏன் செய்வதில்லை? எல்லாம் பணம் சம்பாதிக்கும் நோக்கம் தான் எனக் குஷ்பு குற்றம்சாட்டினார். நீண்ட நாட்களுக்கு பின்னர், பொதுவெளியில் மைக் பிடித்து பேசிய குஷ்புவை பார்த்து பாஜகவினர் மிகுந்த உற்சாகம் அடைந்தனர்.

இனிமேல் தொடர்ந்து பாஜக நிகழ்ச்சிகளில் அவரைப் பார்க்கலாம் என கமலாலய வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில் வரும் 2024 மக்களவை தேர்தல், 2026 சட்டமன்ற தேர்தல் ஆகியவற்றில் குஷ்புவிற்கு சீட் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு நிலவி வருவதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.