ஹாய் மோடி.. ஹலோ ஜின்பிங்; ஜி – 20 மாநாட்டில் திடீர் சந்திப்பு!

சீன அதிபர் ஷி ஜின்பிங் – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பரஸ்பரம் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவில் உள்ள பாலி தீவில் ஜி – 20 உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், சீன அதிபர் ஷி ஜின்பிங், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

உக்ரைன் போர் மற்றும் அதனால் உலக அளவில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள், உலகப் பொருளாதாரம், எரிசக்தி, சுற்றுச்சூழல், டிஜிட்டல் உள்ளிட்ட உலகளாவிய சவால்கள் குறித்து இந்த ஜி – 20 உச்சி மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று தொடங்கிய ஜி – 20 உச்சி மாநாடு நாளை நிறைவு பெற உள்ளது. இந்த மாநாட்டுக்கு இடையே, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்டோரை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். அப்போது பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

நெருக்கமான ஒருங்கிணைப்பு: ஜோ பைடனிடம் மோடி நம்பிக்கை!

இந்நிலையில், இந்தோனேஷிய அதிபர் ஜோகோ விடடோ, ஜி – 20 நாடுகளின் தலைவர்களுக்கு இரவு விருந்து அளித்தார். இதில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது, சீன அதிபர் ஷி ஜின்பிங் – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி திடீரென நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர். மேலும், இருவரும் பரஸ்பரம் கைக்குலுக்கிக் கொண்டதோடு, சில வினாடிகள் பேசிக் கொண்டனர். எனினும், இருவருக்கும் இடையே அதிகாரப்பூர்வ சந்திப்பு எதுவும் திட்டமிடப்படவில்லை.

இந்தியா – சீனா இடையே எல்லைப் பிரச்னை, லடாக் விவகாரம் உள்ளிட்ட விவகாரங்களில் பிரச்னை நிலவி வரும் நிலையில், இரு நாட்டு தலைவர்கள் சந்தித்துக் கொண்டது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.