மதுரை: ஐடிஐ பயிற்றுநர்களை அவுட் சோர்சிங் முறையில் நியமிக்க ஐகோர்ட் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது. தேனியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன், திருச்சியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் உள்ளிட்ட சிலர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘அரசு ஐடிஐக்களில் கணினி மற்றும் மென்திறன் பயிற்றுநர்களாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறோம். பலரது ஒப்பந்தம் நீட்டிப்பு செய்யப்படவில்லை. ஐடிஐ பயிற்றுநர் பணியிடத்தை தனியார் ஏஜென்சி மூலம் அவுட் சோர்சிங் முறையில் நியமிப்பது தொடர்பாக தொழிலாளர் நலத்துறை செயலர் தரப்பில் கடந்த அக்.17ல் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதில் வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால், நீண்ட காலமாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் எங்களைப் போன்ற பலர் பாதிப்பர். எனவே, பயிற்றுநர் பணியிடத்தை அவுட்சோர்சிங் முறையில் நியமிக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும். எங்களையே தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யுமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ஐடிஐ பயிற்றுநர்களை அவுட் சோர்சிங் முறையில் நியமிக்கும் அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்தார். மேலும் மனுவிற்கு தொழிலாளர் நலத்துறை செயலர், வேலைவாய்ப்புத் துறை இயக்குநர் ஆகியோர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 8 வாரம் தள்ளி வைத்தார்.