அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கூடுதலாக 254 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு அனுமதி: பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு

வேலூர்: அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கூடுதலாக 254 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை அனுமதித்து பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து பள்ளிக்கல்வி ஆணையர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 2021-2022ம் கல்வி ஆண்டில் மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டதில் ஆசிரியரின்றி உபரியாக கண்டறியப்பட்ட முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் பள்ளிக்கல்வி ஆணையரின் பொது தொகுப்பிற்கு மாற்றம் செய்யப்படுகிறது.

அவ்வாறு பள்ளி ஆணையரின் பொதுத்தொகுப்பில் உள்ள 254 முதுகலை ஆசிரியர்கள் பணியிடங்களை 11, 12ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் கோரி சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துருக்களின் அடிப்படையில் தமிழ்-33, ஆங்கிலம்-2, கணிதம்-51, இயற்பியல்-50, வேதியியல் 58, வரலாறு 18, வணிகவியல் 4, பொருளியல் 38 ஆகிய 254 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை மாணவர்களின் கல்வி நலனை கருத்தில்கொண்டு கூடுதலாக அனுமதிக்க ஆணை வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.