சென்னையில் உள்ள திருநின்றவூரில் தனியார் பள்ளி ஒன்றின் தாளாளர் அப்பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் சில மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.
அந்த புகாரில், பன்னிரண்டாம் வகுப்பில் சரியாக படிக்காத மாணவிகள் சிலரை தனியாக அழைத்து கவுன்சிலிங் கொடுப்பதாக கூறி தாளாளர் வினோத் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தில் பலமுறை புகார் அளித்தும் அதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த பள்ளி மாணவர்களும் பெற்றோர்களும் பள்ளி தாளாளரை கைது செய்ய வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப்பகுதி முழுவதும் போர்களமாகக் காட்சி அளித்தது.
இதனையடுத்து பாலியல் புகாரில் பள்ளி தாளாளர் வினோத் மீது திருநின்றவூர் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக பள்ளி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது.
மேலும், தலைமறைவாக இருந்த அவரை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் பாலியல் புகாரில் சிக்கிய பள்ளி தாளாளர் வினோத் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற படி கதறி அழுது வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அந்த வீடியோவில் ‘நான் எந்த தவறும் செய்யவில்லை. இது மாணவர்களுக்கு நன்றாக தெரியும்’ என்று தெரிவித்திருந்தார்’. இந்த நிலையில், பாலியல் தொல்லை புகாரில் கோவாவில் தலைமறைவாக இருந்த பள்ளி தாளாளர் வினோத்தை போலீசார் கைது செய்துள்ளனர்.