போலி நில ஆவணங்களுடன் வாங்கிய இழப்பீட்டை திரும்பப் பெறாவிட்டால்… – தமிழக அரசுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

சென்னை: சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கான நிலம் கையகப்படுத்துதலில் போலி நில ஆவணங்களை காண்பித்தவர்களுக்கு வழங்கிய இழப்பீட்டுத் தொகையை திரும்பபெறாவிட்டால், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்காக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்றபோது, ஒரு சிலர் போலி ஆவணங்களை காண்பித்து அரசிடம் 20 கோடி ரூபாய் வரை இழப்பீடு பெற்றுள்ளதாக கூறி ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நிலத்தின் உண்மையான உரிமையாளருக்குத்தான் இழப்பீடு வழங்க வேண்டும் என்று பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றவில்லை எனக் கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போதைய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, மாவட்ட வருவாய் அதிகாரி நர்மதா, வட்டாட்சியர் மீனா ஆகியோர் ஆஜராகினர்.அப்போதைய மாவட்ட ஆட்சியர் பொன்னையா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி. வில்சன், “இழப்பீடு வழங்குவதற்கும் மாவட்ட ஆட்சியருக்கும் தொடர்பில்லை. தேசிய நெடுஞ்சாலைகள் சட்டத்தின் கீழ் நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களும் மாவட்ட வருவாய் அதிகாரிக்குத்தான் உள்ளது” என்று தெரிவித்தார்.

பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்ட மாவட்ட வருவாய் அதிகாரி நர்மதா சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜரானார். சிபிசிஐடி காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் பி.குமரேசன், “தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை நான்கு கோடி ரூபாய் திரும்பப் பெறப்பட்டு உள்ளது” என்று கூறினார்.

அப்போது நீதிபதி, போலி ஆவணங்களை காண்பித்து இழப்பீடு பெற்றவர்கள் தொடர்பாக சிபிசிஐடி நடத்திவரும் விசாரணையில் திருப்தி இல்லை. இழப்பீடாக கொடுக்கப்பட்ட தொகை பொதுமக்களுடையது. அந்தப் பணத்தை முறைகேடாக பெற்றவர்களிடம் இருந்து திரும்ப பெற வேண்டும் என்று உத்தரவிட்டார்.

பொதுமக்களுடைய பணம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான் இந்த நீதிமன்றத்தின் நோக்கம். இதில் கருணை காட்ட முடியாது. தவறாக கொடுக்கபட்ட இழப்பீட்டுத் தொகையை திரும்ப பெறாவிட்டால், இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும் என்று எச்சரித்த நீதிபதி, விசாரணையை டிசம்பர் 2-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.