புதுடில்லி மதுபான மோசடி மற்றொரு தொழிலதிபர் கைது| Dinamalar

புதுடில்லி, புதுடில்லியில் மதுபான விற்பனை மோசடி தொடர்பான வழக்கில் மற்றொரு தொழிலதிபரை, அமலாக்கத் துறை நேற்று முன்தினம் கைது செய்துள்ளது.

புதுடில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, மதுபான விற்பனையில் தனியாருக்கும் வாய்ப்பு தரும் வகையில் மதுபான கொள்கை மாற்றப்பட்டது.

இதில், பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை விசாரித்து வருகின்றன.
கலால் துறையை கவனிக்கும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்டோரிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் ஏற்கனவே விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்த வழக்கில், தொழிலதிபர் தினேஷ் அரோரா உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை சார்பில் சமீபத்தில் குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்நிலையில், இந்த வழக்கில் புதுடில்லியை ஒட்டியுள்ள ஹரியானா மாநிலம் குருகிராமைச் சேர்ந்த தொழிலதிபர் அமித் அரோராவுக்கு தொடர்பு உள்ளதாக, சி.பி.ஐ., தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர், மணீஷ் சிசோடியாவுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.

இதையடுத்து அமித் அரோராவிடம், அமலாக்கத் துறையினர் நேற்று முன்தினம் விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.