காந்திநகர்,
குஜராத்தில் 182 இடங்களை கொண்டுள்ள சட்டசபைக்கு டிசம்பர் 1, 5 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக 89 தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், அகமதாபாத்தில் பிரதமர் மோடி நேற்று மாலை பேரணியாக சென்றார்.
மாலை தொடங்கும் இந்த பயணம் இரவு 9.45 மணியளவில் நிறைவு பெற்றது. அகமதாபாத்தில் 13 தொகுதிகளையும், காந்திநகரில் ஒரு தொகுதியையும் இணைக்கும் வகையில், சுமார் 50 கி.மீ தொலைவு வரை பிரதமர் சாலை மார்கமாகவே பயணித்தார்.
இந்த பிரம்மாண்ட பேரணியில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சாலைகளின் இருபுறங்களிலும், வீட்டின் மாடி, பால்கனிகளில் இருந்தும் பிரதமர் மோடியைக் காண மக்கள் குவிந்திருந்தனர். இதுவே பிரதமர் மோடி நாட்டில் மேற்கொண்ட மிக நீண்ட பேரணி என்பது குறிப்பிடத்தக்கது.