அண்ணாமலையார் தீப தரிசனம் காண ஆன்லைனில் 1600 அனுமதி சீட்டுகள்: நாளை காலை 10 மணிக்கு வெளியீடு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் மற்றும் மகா தீப தரிசனத்துக்கு ஆன்லைன் மூலமாக 1,600 அனுமதி சீட்டுகள் நாளை (4-ம் தேதி) காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது என ஆட்சியர் முருகேஷ் கூறியுள்ளார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகைத் தீபத் திருவிழா நாளான வரும் 6ம் தேதி காலை 4 மணிக்கு பரணி தீபத்தை தரிசிக்க ரூ.500 கட்டணத்தில் 500 அனுமதி சீட்டுகளும், மாலை 6 மணிக்கு மகா தீபம் மற்றும் அர்த்தநாரீஸ்வரரை தரிசிக்க ரூ.600 கட்டணத்தில் 100 அனுமதி சீட்டுகள் மற்றும் ரூ.500 கட்டணத்தில் 1000 அனுமதி சீட்டுகள் வழங்கப்பட உள்ளன.

https://annamalaiyar.hrce.tn.gov.in-என்ற திருக்கோயில் இணையதளம் வழியாக டிசம்பர் 4ம் தேதி (நாளை) காலை 10 மணி முதல் அனுமதி சீட்டுகள் வழங்கப்பட உள்ளன. கட்டண சீட்டு பெறுபவர்களின் ஆதார் அட்டை, செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி கண்டிப்பாக தேவை. ஒரு ஆதார் அட்டைக்கு ஒரு கட்டண சீட்டு மட்டுமே பதிவு செய்ய முடியும். கட்டண சீட்டு பதிவு செய்தவுடன் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் எண் (ஓடிபி), செல்பொன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக வந்து சேரும்.

கட்டண சீட்டு பதிவின்போது பயன்படுத்தப்படும் மின்னஞ்சல் வழியாக கட்டண சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆன்லைன் மூலம் கட்டண டிக்கேட் பதிவிறக்கம் செய்தவர்கள், பரணி தீப தரிசனத்துக்கு டிசம்பர் 6ம் தேதி அதிகாலை 2 மணி முதல் 3 மணி வரை அனுமதிக்கப்படுவர். மகா தீப தரிசனத்துக்கு டிசம்பர் 6ம் தேதி பிற்பகல் 2.30 மணி முதல் 3.30 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர். தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கட்டண அனுமதி சீட்டு மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன், அம்மணி அம்மன் கோபும் (வடக்கு கோபுரம்) வழியாக குறிப்பிட்ட நேரத்துக்கு அனுமதிக்கப்படுவர்.

குறிப்பிட்ட நேரத்துக்கு வருகை தர தவறும் பக்தர்களை அனுமதிக்க இயலாது. தீபத் திருவிழா தொடர்பான விவரங்களை தெரிந்துகொள்ள 1800 425 3657 என்ற இலவச எண்ணை பக்தர்கள் தொடர்பு கொள்ளலாம். திருக்கோயிலில் வைக்கப்பட்டுள்ள க்யூ. ஆர். கோடு பயன்படுத்தி ஆன்லைன் மூலமாக நன்கொடை செலுத்தி அண்ணாமலையாரின் அருளை பெற வேண்டுகிறோம். ராஜகோபுரம் அருகே உள்ள திட்ட வாயில் பொருட்கள் பாதுகாப்பு அறை மற்றும் திருமஞ்சன கோபுரம் நுழைவு வாயிலில் மகா தீப பிரார்த்தனை நெய் குடத்துக்கான காணிக்கை கட்டண சீட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது” என ஆட்சியர் முருகேஷ் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.