கும்பகோணம்: திருவிடைமருதூர் வட்டம், ஆடுதுறை – தரங்கம்பாடி சாலையிலுள்ள ரயில் பாதையில் செல்லும் உயர்மின் அழுத்த கம்பியை லாரி அறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கும்பகோணம் – மயிலாடுதுறை செல்லும் ரயில் இருப்புப்பாதை, ஆடுதுறை – தரகம்பாடி குறுக்கேயுள்ள ரயில்வே கேட்டில் நேற்று ரயில் வந்து சென்ற பிறகு கேட் கீப்பர், கேட்டை திறந்தார். அப்போது, ரயில்வே பராமரிப்பு பணிக்காக சென்ற டிப்பர் லாரியை ஒட்டி வந்த மணல்மேட்டைச் சேர்ந்த கார்த்தி, விரைவாக செல்ல வேண்டும் என கேட்டின் பக்கவாட்டிலுள்ள பகுதி வழியாக எதிர்புறம் செல்ல முயன்றார். அப்போது, ரயில் தண்டவாளத்தின் மேல் தாழ்வாக தொங்கிகொண்டிருந்த உயர்மின் அழுத்த கம்பி, லாரியில் சிக்கியதால் திடிரென அறுந்து தொங்கியது.
இதனையறிந்த, கேட் கீப்பர், உடனடியாக ரயில்வே தலைமை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். இதனையடுத்து ரயில்வே பொறியியல் துறையினர் வந்து பார்வையிட்டு, 5 மணி நேரம் போராடி, அதனை சீர் செய்தனர். இதனால் திருப்பதி விரைவு ரயில், திருச்சி செல்லும் பயணிகள் ரயில், ராமேஸ்வரம், சென்னை செல்லும் ரயில்கள், திருச்சியிலிருந்து டீசல் இன்ஜின் வரவழைக்கப்பட்டு பின்னர் இயக்கப்பட்டது.
தொடர்ந்து நள்ளிரவு 12 மணியளவில் சீர் செய்யபட்டு உழவன் விரைவு ரயில் மின்சாரம் மூலம் இயக்கப்பட்டது. வேகமாக வந்த லாரி, உயர்மின் அளுத்த கம்பியை அறுத்ததும் டிரிப் ஆகி, மின்சாரம் துண்டித்ததால் அதிஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் லாரி ஒட்டுநர் கார்த்தியை, ரயில்வே போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்