சென்னை: தானியங்கி மஞ்சப்பை விற்பனை இயந்திரமானது அனைவரின் பயன்பாட்டிற்காக சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் அரசு வழக்கறிஞர் கட்டிடம் உள்ளிட்ட 5 இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.
பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை தடுக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு சார்பில் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தில், மஞ்சப்பை பயன்பாடு குறித்து தமிழக அரசு மக்களிடையே பல்வேறு வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. மேலும், தமிழகத்தில் அனைவரும் பயன்பெறும் வகையில் பொது இடங்களில் மஞ்சப்பை இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. அந்த இயந்திரத்தில் 10 ரூபாய் செலுத்தி மஞ்சப்பை பெற்றுக் கொள்ளலாம்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா, உயர் நீதிமன்றத்தில் மஞ்சப்பை திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார். சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திலுள்ள அரசு வழக்கறிஞர் கட்டிடம் உள்ளிட்ட சுமார் 5 இடங்களில் இந்த தானியங்கி மஞ்சப்பை விற்பனை இயந்திரங்கள் அனைவரின் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளன. அரசு வழக்கறிஞர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள தானியங்கி மஞ்சப்பை இயந்திரத்தை தமிழ்நாடு அரசு பிளீடர் முத்துக்குமார் பொது பயன்பாட்டுக்காக துவங்கி வைத்தார்.