ஹிமாச்சல் முதல்வர் யார்? – பிரியங்கா காந்தி 'டிக்' அடிக்கும் பெயர் இதுதான்!

ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில், காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்துள்ள நிலையில், முதலமைச்சர் குறித்து அக்கட்சி பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி முடிவு எடுப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.

68 சட்டப்பேரவைத் தொகுதிகளை கொண்ட ஹிமாச்சலப் பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு, கடந்த நவம்பர் மாதம் 12 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ஆளும் பாஜக – காங்கிரஸ் – ஆம் ஆத்மி கட்சிகளிடையே போட்டி நிலவியது. தேர்தலில் மூன்று கட்சிகள் போட்டியிட்டாலும், பாஜக – காங்கிரஸ் இடையே தான் இரு முனை போட்டி நிலவியது.

இந்நிலையில், கடந்த 8 ஆம் தேதி ஹிமாச்சலப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இதன்படி, மொத்தம் உள்ள 68 சட்டப்பேரவைத் தொகுதிகளில், காங்கிரஸ் பெரும்பான்மையைத் தாண்டி 40 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது. பாஜக 25 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை இழந்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலைக் காட்டிலும், காங்கிரஸ் கட்சி, 19 இடங்களில் கூடுதலாக வெற்றி பெற்றுள்ளது.

இதை அடுத்து, முதலமைச்சர் பதவியை ஜெய்ராம் தாகூர் ராஜினாமா செய்தார். இதற்கிடையே நேற்று புதிய முதலமைச்சரை தேர்வு செய்ய, தலைநகர் சிம்லாவில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற 40 எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டம், சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பெகால், முன்னாள் முதலமைச்சர் பூபேந்திர ஹூடா, ஹிமாச்சல பிரதேச மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ராஜிவ் சுக்லா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், ஹிமாச்சல பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் பிரதிபா சிங், முதலமைச்சராக தேர்வு செய்யப்பட வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் திடீரென்று போர்க்கொடி தூக்கினர்.

இதனால் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முதலமைச்சர் தேர்வு நடைபெறவில்லை. மாறாக, ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, ஹிமாச்சலப் பிரதேச மாநில முதலமைச்சர் விவகாரத்தில் காங்கிரஸ் மேலிடம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், ஹிமாச்சலப் பிரதேச மாநில முதலமைச்சர் குறித்து, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி முடிவு எடுப்பார் என தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான அதிகாரமும் அவருக்கு வழங்கப்பட்டு உள்ளது.

காரணம், மாநிலம் முழுவதும் பிரியங்கா காந்தி சுற்றி சுற்றி சுறாவளி பிரசாரம் செய்தார். மத்திய அரசின் பல்வேறு திட்டங்களில் உள்ள குறைபாடுகளை பொது மக்களுக்கு எடுத்துக் கூறி பிரசாரம் செய்தார். இதன் பலனாகவே, பாஜவிடம் இருந்து ஆட்சி அதிகாரத்தை பறித்துள்ளது காங்கிரஸ். இதனால், முதலமைச்சர் விவகாரத்தில், பிரியங்கா காந்திக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.

முதலமைச்சர் பந்தயத்தில், பிரதிபா சிங், சுக்விந்தர் சிங் சுகு மற்றும் முகேஷ் அக்னிஹோத்ரி ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில் ஒருவர் தான் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.