திருச்சி: திருச்சி மாவட்டம் வாத் தலை அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்த விபத்தில் ஓசூரைச் சேர்ந்தவர் உயி ரிழந்தார். 10 பேர் காயமடைந்தனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவிலிருந்து நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்து நேற்று முன்தினம் புறப்பட்டது. பேருந்து நேற்று அதிகாலையில் திருச்சி மாவட்டம் வாத்தலை அருகே மஞ்சக்கோரை பகுதியில் வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையிலேயே கவிழ்ந்தது.
இந்த விபத்தில் பேருந் தில் பயணித்த 40 பேரில், 11 பேர் காயமடைந்தனர். தகவலறிந்த வாத்தலை போலீஸார், அங்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதில், சிகிச்சை பலனின்றி கிருஷ்ண கிரி மாவட்டம் ஒசூர் ஆவளப் பள்ளியைச் சேர்ந்த ஸ்டீபன் அய்யாத்துரை பாண்டியன் (53) இறந்தார். 10 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து வாத்தலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.