இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரும் பழமையான கட்சியான ஷிரோமணி அகாலிதளம் கட்சியைச் சேர்ந்த எம்.பி ஹர்சிம்ரத் கவுர் பாதல், தன் மாநில முதல்வர் பக்வந்த் மானை, குடித்துவிட்டு அரசை வழிநடத்துவதாக விமர்சித்திருக்கிறார்.

நாடாளுமன்ற மக்களவையில் இன்று பேசிய ஹர்சிம்ரத் கவுர் பாதல், “பஞ்சாப் மாநிலத்தின் தற்போதைய முதல்வர் சில மாதங்களுக்கு முன்பு அந்த (மக்களவை) மூலையில் அமர்ந்திருந்தார் என்பது இந்த முழு அவைக்கும் தெரியும். சபாநாயகரே, மானுக்கு நெருக்கமாக அமர்ந்திருந்த எம்.பி-க்கள் தங்கள் இருக்கைகளை மாற்றுவது தொடர்பாக இதற்கு முன் இருந்த சபாநாயகருக்கு புகார்கள் வந்தன என்பது குறித்த விவரங்களைப் பெறுமாறு நான் உங்களுக்கு சவால் விடுகிறேன். பாராளுமன்றத்துக்கு காலை 11 மணிக்கு குடிபோதையில் வந்த முதல்வர் இப்போது அரசை வழிநடத்துகிறார்.

முதல்வரே இப்படி இருந்தால், மாநிலத்தின் நிலை என்னவாகும் என்பதை நீங்கள் கற்பனை செய்து பார்க்கலாம். `குடித்துவிட்டு வாகனம் ஓட்டாதீர்கள்’ என்று சாலைகளில் எழுதப்பட்டிருப்பதைப் பார்த்திருக்கிறோம். ஆனால், அவர்கள் குடித்துக்கொண்டு அரசை ஓட்டுகிறார்கள்” என்று கூறினார். ஹர்சிம்ரத் கவுர் பாதலின் இத்தகைய பேச்சின்போது, சபாநாயகர் ஓம் பிர்லா, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிற எம்.பி-க்கள் சிரித்தனர்.
மேலும் இந்த கூட்டத்தில், “போதைப்பொருள் கடத்தலில் பஞ்சாப் முதலிடத்தில் இருப்பது கவலைக்குரிய விஷயம்” என்று ஹர்சிம்ரத் கவுர் பாதல் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.