டெல்லி: போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதால் புதிய வகை கொரோனாவால் இந்தியாவில் பெரிய அலை ஏற்பட வாய்ப்பு இல்லை என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சீனாவில் பி.எப்.7 என்ற புதிய வகை வைரஸ் வேகமாக பரவி வருவதால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு ஒன்றிய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. சர்வதேச விமான நிலையங்களில் ரேண்டம் பரிசோதனை செய்வது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடிக்கிவிடப்பட்டுள்ள நிலையில், பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பி.எப்.7 என்பது ஒமிக்ரான் வைரஸ் போல, சிறிய திரிபுடன் கூடிய வைரஸ் என்பதால் இந்தியாவில் பெரிய அலை ஏற்பட வாய்ப்பில்லை என நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த புது வகையான வைரசால் பெரிய அளவில் அச்சுறுத்தல் இருக்காது என்ற நிபுணர்கள், அதிகபட்சமாக ஓரிரு நாட்களுக்கு லேசான மூச்சுத்திணறல் மட்டும் இருக்கும் என்று தெரிவித்துள்ளனர். இந்தியாவில் 2 தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ் செலுத்தியவர்கள் அதிகம் என்பதால் பி.எப்.7 வைரசால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என்று கர்நாடக சுகாதார அமைச்சர் சுதாகர் ராவ் தெரிவித்துள்ளார். மேலும் அவர் 3 மாதங்களுக்கு முன்பே குஜராத்தில் பி.எப்.7 வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதையும், அதன்பின் பெரிய அளவில் பரவல் ஏற்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.