ஈரோடு மாவட்டத்தில் சாலையில் நின்றிருந்த லாரி தானாக ஓடி விபத்துக்குள்ளானதில் மூன்று ஸ்கூட்டர்கள் சேதமடைந்துள்ளது.
கோவை குமாரபாளையத்தில் உள்ள தனியார் கல்குவாரிக்கு சொந்தமான லாரி ஒன்று ஈரோடு புஞ்சைபுளியம்பட்டிக்கு நேற்று மாலை வந்தது. இதையடுத்து லாரி ஓட்டுநர் குமாரபாளையம் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் புளியம்பட்டி சத்தியமங்கலம் சாலையில் உள்ள வங்கி அருகே சைக்கிள் கடையில் நிறுத்தினார்.
பின்பு அந்த கடையிலிருந்து வெல்டிங் கேஸ் சிலிண்டரை லாரியில் ஏற்றிய போது திடீரென லாரி இயங்கி தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளானது. இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் உண்டானது. மேலும் வங்கியின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மூன்று ஸ்கூட்டர்கள் லாரி மோதியதில் சேதமடைந்தது.
ஆனால் வங்கி முன்பு யாரும் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த புஞ்சைபுளியம்பட்டி போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.