சென்னை: சமூக பாதுகாப்பு திட்டங்களின்கீழ், மாற்றுத் திறனாளிகளுக்கான மாத ஓய்வூதியம் ரூ.1,000-ல் இருந்து ரூ.1,500 ஆக உயர்த்தி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
உலக மாற்றுத் திறனாளிகள் தின விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘வருவாய் துறைவழியாக ஓய்வூதியம் பெற்றுவரும் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட 4 லட்சத்து 39 ஆயிரத்து 315 பேருக்கு தற்போது மாத ஓய்வூதியம் ரூ.1,000 வழங்கப்படுகிறது. இது, ரூ.1,500 ஆக ஜனவரி 1-ம் தேதி முதல் உயர்த்தி வழங்கப்படும். இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.263.56 கோடி கூடுதல் செலவாகும்’’ என்று தெரிவித்திருந்தார்.
அதன்படி, மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியம் ரூ.1,000-ல் இருந்து ரூ.1,500 ஆக உயர்த்தி வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை நேற்று முன்தினம் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: பார்வையற்ற மாற்றுத் திறனுடையோர் உள்ளிட்ட அனைத்து மாற்றுத் திறனுடையோர்களுக்கும் வழங்கப்படும் மாத ஓய்வூதியம் ரூ.1,000-ல் இருந்து ரூ.1,500 ஆக உயர்த்தி வழங்கவும், டிசம்பர் முதல் நடைமுறைப்படுத்தவும், ஜனவரி மாதம் முதல் வழங்குவதற்கு முடிவு செய்தும், இதற்காக, ரூ.65 கோடியே 89 லட்சத்து 72 ஆயிரத்து 500 ஒதுக்கீடு செய்தும் அரசு ஆணையிடுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.