லும்பி – ப்ரோவாக் தடுப்பூசி – புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!

ஆட்டு அம்மைக்கான தடுப்பூசியான லும்பி ப்ரோவாக்-ஐ வணிக ரீதியில் தயாரிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நாக்பூரில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, மகாராஷ்டிர மாநில முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது.

எல்.எஸ்.டி.க்கு உள்நாட்டு தடுப்பூசியான லும்பி ப்ரோவாக்கை உருவாக்குவதில் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சில் ஐ.சி.ஏ.ஆர் மேற்கொண்ட பாராட்டுக்குரிய முயற்சியை மத்திய அமைச்சர் ரூபாலா பாராட்டினார். மேலும், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியாவின் கால்நடைத் துறையின் எதிர்காலத் தேவைகளுக்காக ஆட்டு அம்மை தடுப்பூசியை பெரிய அளவில் தயாரிப்பதை உறுதி செய்யும் என்றும் அவர் கூறினார்.

தற்போது ஆட்டு அம்மை தடுப்பூசி விலங்குகளில் லும்பி தோல் நோயைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது. லும்பிக்கு எதிரான இதன் செயல்திறன் பயனளிப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு உதவும் வகையில் தடுப்பூசியை எந்தவித காலதாமதமும் இல்லாமல் பெரிய அளவில் தயாரிக்கத் தொடங்குமாறு புனே ஐவிபிபி-ஐ அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

தேசிய கால்நடை தடுப்பூசி உருவாக்க மையம், அரியானா மாநிலம் ஹிசாரில் உள்ள இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய குதிரைகள் ஆராய்ச்சி மையம், உத்தரப்பிரதேச மாநிலம் இசட்நகர் இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து, லும்பி ப்ரோவாக் என்ற பெயரில் எல்எஸ்டி தடுப்பூசியை உருவாக்கியது.

இந்நிகழ்ச்சியில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா, மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.