ஒப்பந்த செவிலியர்களுக்கு கூடுதல் சம்பளத்துடன் மாற்று பணி – அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி!

கொரோனா கால ஒப்பந்த செவிலியர்கள் 2,366 பேருக்கு கூடுதல் சம்பளத்துடன் கூடிய மாற்றுப்பணி வழங்கப்படும் என, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதிப்பட தெரிவித்து உள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குனரகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில், “நலம் 365” எனும் யூடியூப் சேனலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசியதாவது:

சமூக வலைதளங்களில் ஒரு சிலர் பொய்யான செய்திகளை பரப்புவதை தொழிலாக வைத்திருக்கிறார்கள். அதனை தடுக்கும் வகையில், மருத்துவத் துறை சார்பில் “நலம் 365” எனும் யூடியூப் சேனல் தொடங்கப்பட்டு உள்ளது. இதில், மக்களின் உடல்நலம் அவசியம் குறித்து விழிப்புணர்வு செய்யப்படும்.

இந்த யூடியூப் சேனலில் மாதத்தில் ஒரு நாள் மக்களிடம் தொடர்பு கொண்டு அவர்களின் பிரச்னை கேட்டறிந்து கலந்துரையாடல் செய்யவும், மருத்துவ துறை மீது பரப்பப்படும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் இந்த சேனல் உதவியாக இருக்கும். யோகா, மூச்சு பயிற்சி மக்களுக்கு சொல்லி தரவும், உணவு பொருள்களின் அவசியம், அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்ய இந்த யூடியூப் சேனல் உதவியாக இருக்கும். எந்நேரமும் மக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம். இந்த சேனல் மக்களின் நல்வாழ்வை உறுதி செய்யும் வகையில் அமையும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

கடந்த அதிமுக ஆட்சியில் 2019 ஆம் ஆண்டு 2,347 பேர் எம்.ஆர்.பி தேர்வாணையம் மூலம் விண்ணப்பித்தனர். அதில், 2,323 பேர் பணியில் சேர்ந்து விட்டனர். இதனை தொடர்ந்து, 2020 ஆம் ஆண்டு, எம்ஆர்பி மூலம் விண்ணப்பித்த 5,736 பேரில் 2366 பேரில் பணியில் சேர்ந்தனர். இந்த பணி நியமனத்தில் அதிமுக அரசால் கொரோனா தொற்றை காரணம் காட்டி சான்றிதழ் பரிசோதனை இல்லாமல், விகிதாச்சார அடிப்படையில் இன்றி, அடிப்படை விதிமுறைகளை மீறி பணியமர்த்தப்பட்டனர்.

பேரிடர் காலத்தில் விதிமுறை மீறி பணிக்கு வந்தவர்களை பணியில் சேர்க்க வேண்டாம் என்று நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பித்துள்ளன. ஆனால் இவர்களை பணியை விட்டு அனுப்பும் நோக்கம் அரசுக்கு இல்லை. நீதிமன்றங்களின் உத்தரவால் நான்கு மாதங்களாக ஊதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. அதனால், பணி நீட்டிப்பு செய்ய இயலாத சூழல் ஏற்பட்டது.

இருப்பினும், கொரோனா தொற்று காலத்தில் பணியாற்றியவர்களின் நலன் கருதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைப்படி, பொது சுகாதார துறையில் காலியாக உள்ள 2,200 செவிலியர்கள் பணியிடங்கள், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் காலியாக உள்ள 270 இடைநிலை சுகாதார செவிலியர்கள் பணியிடங்களுக்கு, கொரோனா காலத்தில் பணியாற்றிய ஒப்பந்த செவிலியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இந்த பணி நியமனம், ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரின் கீழ் நடைபெறும். கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்கள் 14 ஆயிரம் ரூபாய் வாங்கி இருந்தார்கள். தற்போது, மாற்று பணியிடம் காரணமாக 18 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும். ஆனால், அவர்களுக்கு பணி நிரந்தரம் என்பது சாத்தியமில்லை. இதனை கொரோனா கால ஒப்பந்த செவிலியர்கள் உணர வேண்டும்.

மற்ற அரசியல் கட்சி தலைவர்கள் மனிதாபிமான அடிப்படையில், சுகாதார துறையின் மீது அக்கறை கொண்டு கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க பார்க்கிறார்.

சீனாவில் இருந்து தமிழகம் வந்த 2 பேர் உட்படவெளிநாட்டில் இருந்து வந்த மொத்தம் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இவர்களது மாதிரிகள் மரபணு பகுப்பாய்வு பரிசோதனை செய்ததில், 6 பேரின் மாதிரிகளின் முடிவு வெளியாகியுள்ளது. அந்த 6 பேரில் பி.எஃப்.7 என்ற ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு இல்லை எனவும், கடந்த டிசம்பர் மாதத்தில் 93 பேரின் மாதிரிகள் மரபணு பகுப்பாய்வு செய்ததில், அதில் 91 பேருக்கு ஒமைக்ரான் வகை வைரஸ் பாதிப்பும், 2 பேருக்கு டெல்டா வகை வைரஸ் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.