நாமக்கல் மாவட்டம் முழுவதும் மொத்தமாக அரசுக்கு சொந்தமான 188 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. ஒவ்வொரு நாளும் மாவட்டம் முழுவதும் உள்ள மதுக்கடைகளில் ரூ.1.5 கோடி முதல் ரூ.2.5 கோடி வரை மது விற்பனை சராசரியாக நடைபெறுகிறது. குறிப்பாக பண்டிகை நாட்களான பொங்கல், தீபாவளி, புத்தாண்டு ஆகிய பண்டிகை நாட்களில் டாஸ்மாக் கடைகளில் அதிகமான மது விற்பனை நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆங்கில புத்தாண்டை கொண்டாடும் விதமாக மதுபிரியர்கள் நேற்று முன்தினம் முதல் டாஸ்மாக் கடைகளுக்கு படையெடுத்தனர்.
குறிப்பாக, நேற்று முன்தினம் இரவு நேரத்தில் மது விற்பனை படுஜோராக இருந்தது. அந்த வகையில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 31-ம் தேதி 5 கோடியே 10 லட்சத்திற்கும் புத்தாண்டான நேற்று 4 கோடியே 15 லட்சத்திற்கும் என மொத்தமாக இரண்டு நாட்களில் 9 கோடியே 25 லட்சத்திற்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் மாவட்ட மேலாளர் தெரிவித்தார். இது கடந்த ஆண்டை காட்டிலும் அதிகம் எனவும் தெரிவித்தார்.
தமிழகத்தை பொறுத்த வரை, புத்தாண்டு கொண்டாட்டத்தில் ரூ.1000 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் 3 மடங்கு சரக்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டன. பீர், விஸ்கி, பிராந்தி, ரம், ஜின், ஒயின் உள்ளிட்ட அனைத்து மது வகைகளும் குவிக்கப்பட்டன.
இதனால் கடந்த ஆண்டை விட புத்தாண்டு விற்பனை அதிகரித்துள்ளது. 31 மற்றும் 1-ந்தேதி 2 நாட்களும் சேர்த்து சுமார் ரூ.1000 கோடிக்கு மது விற்பனை ஆகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 31-ந்தேதி மட்டும் ரூ.610 கோடிக்கு மது விற்பனை நடந்ததாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் ஆகிய 5 மண்டலங்களிலும் கடந்த காலத்தை விட மது விற்பனை அதிகரித்துள்ளது.