காத்திருங்கள்… 50,000 ஆண்டுகளுக்குப் பிறகு பூமியின் அருகில் வரும் பச்சை நிற வால் நட்சத்திரம்!

நியூயார்க்: 50,000 ஆண்டுகளுக்குப் பிறகு நமது சூரியக் குடும்பத்திற்கு வெளியிலிருந்து வால் நட்சத்திரம் ஒன்று பூமிக்கும், சூரியனுக்கு அருகில் வரவுள்ளது.

‘C/2022 E3’ என்ற பெயரில் அறியப்படுகிறது இந்த வால் நட்சத்திரம். பூமிக்கும் சூரியனுக்கும் அருகில் வரும் இந்த வால் நட்சத்திரத்தை ஜனவரி மாதம் இறுதியில் – பிப்ரவரி மாத தொடக்கத்திலிருந்து தொலைநோக்கிகள் மூலமும், பைனாகுலர் மூலமும் பார்க்கலாம். இந்த வால் நட்சத்திரத்தை இரவில் வானத்தில் பார்ப்பது கடினமானது. ஆனால், நமது சூரிய குடும்பத்தின் வழியாக நகரும்போது அதன் பிரகாசத்தை நம்மால் பார்க்க முடியும் என்று நாசா தெரிவித்திருக்கிறது.

இந்த வால் நட்சத்திரம் அதிகப்படியான பிரகாசத்துடன் பயணித்து வந்தால் அதிகாலையில் வெறும் கண்ணிலே மிகத் தெளிவாக இந்த வால் நட்சத்திரத்தை நம்மால் பார்க்க முடியும். மேலும், வால் நட்சத்திரம் வடமேற்கு திசையில் நகரும்போது வானத்தில் ஒரு மங்கலான பச்சை நிற பளபளப்பாகத் தோன்றும்.

வால் நட்சத்திரம் சூரிய குடும்பத்திற்கு வெளியே இருந்தாலும், அது நமது சூரியனை ஒரு குறிப்பிட்ட சுற்றுபாதையில் சுற்றி வருகிறது. இதன் காரணமாக இந்த வால் நட்சத்திரம் நீண்ட பயணத்தை கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த வால் நட்சத்திரம் சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது மனித நாகரிக வளர்ச்சி தோன்றுவதற்கு முன்னர் கற்கால மனித சமூகம் வாழ்ந்த காலத்தில் பூமிக்கு அருகில் வந்ததாகவும், அதனைத் தொடர்ந்து தற்போதுதான் இந்த வால் நட்சத்திரம் மீண்டும் பூமிக்கும் சூரியனுக்கும் அருகில் வருகிறது எனக் கூறப்படுகிறது.

அடுத்த முறை இந்த வால் நட்சத்திரத்தைக் காண ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகும் என்று அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். ’C/2022 E3’ வால் நட்சத்திரத்தை கடந்த ஆண்டு மார்ச் மாதம் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.