ஹரியானா: `குடிபோதையில் ரகளை' காரை நடுரோட்டில் நிறுத்தி வாக்குவாதம் செய்த பெண் செவிலியர்

ஹரியானா மாநிலம் ஹிசார் என்ற இடத்தில் மக்கள் நடமாட்டம் மற்றும் வாகன நெருக்கடி மிகுந்த ரோட்டில் பெண் ஒருவர் தனது காரை கொண்டு வந்து நிறுத்தினார். காரை ஓட்டி வந்த அப்பெண் குடிபோதையில் இருந்திருக்கிறார். அப்பெண் நடுரோட்டில் காரை நிறுத்தியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்திலிருந்து இறங்கி வந்து காரில் இருந்த பெண்ணிடம் காரை அங்கிருந்து எடுக்கும்படி கேட்டுக்கொண்டனர். ஆனால் அப்பெண் தனது காரை எடுக்க மறுத்ததோடு அவர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பெண்ணைச் சுற்றி மக்கள் கூட்டம் கூடியது. ஆனால் அதனைப்பற்றி கவலைப்படாமல் தன்னுடன் பேசியவர்களிடம் அப்பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.

அவர் காரில் இறங்க முயன்றார். ஆனால் குடிபோதையில் அவரால் முடியவில்லை. இதனால் கார் கதவைத் திறந்து வைத்துக்கொண்டு வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார். அதன் பிறகு எப்படியோ காரில் இருந்து இறங்கி வெளியில் வந்து அங்கு நின்று கொண்டிருந்தவர்களுடன் வாக்குவாதம் செய்தார்.

அங்கு நின்றவர்களிடம் தனது வேலை குறித்தும், தான் வாங்கும் சம்பளம் குறித்தும் பெரிதாகப் பேசினார். அதோடு தனது காரை போலீஸார் பறிமுதல் செய்தாலும் தன்னால் வேறு கார் வாங்க முடியும் என்று அப்பெண் தெரிவித்தார்.

நடுரோட்டில் கூட்டம் கூடி நிற்பதை ரோந்துக்கு வந்த போலீஸார் பார்த்து அங்கு சென்றனர். அவர்கள் வந்து அப்பெண்ணிடம் காரை அங்கிருந்து எடுக்கும்படி கேட்டுக்கொண்டனர். அப்படி இருந்தும் அப்பெண் காரை எடுக்க மறுத்து ரகளை செய்து கொண்டிருந்தார். இதனால் 20 நிமிடத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்பெண்ணை போலீஸார் போராடி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அவரிடம் உரிய ஆவணங்களும் இல்லை. இது தொடர்பாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அப்பெண் ரோட்டில் ரகளை செய்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவியது. அப்பெண்ணிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் அவர் ராஜஸ்தானில் அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றுவது தெரிய வந்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.