ஹெலிகாப்டர் விபத்து: உள்துறை அமைச்சர் உட்பட 16 பேர் உயிரிழப்பு!

உக்ரைன் நாட்டில் ஹெலிகாப்டர் விபத்தில், அந்நாட்டு உள்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி உட்பட 16 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உக்ரைன் நாட்டின் உள்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி, தனது அமைச்சக அதிகாரிகளுடன் இன்று ஹெலிகாப்டரில் சென்றார். தலைநகர் கீவ் நகருக்கு 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ப்ரோவெரி என்ற பகுதி அருகே வந்த போது, ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து, அங்கிருந்த மழலையர் பள்ளி அருகே நிலைத் தடுமாறி கீழே விழுந்து விபத்துக்கு உள்ளானது.

இந்த விபத்தில், உள்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி, உள்துறை இணை அமைச்சர், அமைச்சக அதிகாரிகள், பள்ளி குழந்தைகள் இரண்டு பேர் என மொத்தம் 16 பேர் பலியாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஹெலிகாப்டர் தீப்பிடித்து எரியும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

உக்ரைன் நாட்டின் தேசிய காவல் துறையின் தலைவர் இகோர் க்ளைமென்கோ கூறுகையில், “இதுவரை 16 பேர் உயிரிழந்து உள்ளனர்” என தெரிவித்து உள்ளார். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள நிலையில், பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.