குடியாத்தம்: குடியாத்தம் அருகே நள்ளிரவில் கிராமத்திற்குள் நுழைந்து மாமரங்களை சேதப்படுத்திய யானைகளை வனத்துறையினர் விரட்டியடித்தனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் வனப்பகுதிையயொட்டி உள்ள தனகொண்டபள்ளி, சைனகுண்டா, பரதராமி, மோர்தானா உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இரவு நேரங்களில் காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதம் செய்து வருகிறது. இதனை வனத்துறையினர், பொதுமக்கள் பட்டாசு வெடித்தும், மேளம் அடித்து மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டியடித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு குடியாத்தம் அடுத்த விழுந்தோன்பாளையம் கிராமத்தில் 5 காட்டு யானைகள் விவசாய நிலத்திற்குள் நுழைய முயன்றது. தகவல் அறிந்த குடியாத்தம் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பட்டாசு வெடித்து மேளம் அடித்து யானைகளை மீண்டும் காட்டுக்குள் விரட்டினர். இருப்பினும் யானைகள் மீண்டும் விவசாய நிலத்துக்குள் நுழைந்து விடுமோ என்ற அச்சத்தில் விவசாயிகள் பீதியில் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 3 யானைகள் குடுமிபட்டி கிராமத்தில் உள்ள விவசாய நிலத்திற்குள் புகுந்தது. அங்கிருந்த 5மாமரங்களை முறித்து சேதப்படுத்தியது. தகவலறிந்த வனத்துறையினர், விவசாயிகள் திரண்டு யானைகளை நீண்ட நேரம் போராடி விரட்டியடித்தனர்.
வனப்பகுதியில் இருந்து அடிக்கடி யானைகள் வெளியேறி விவசாய நிலத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இவற்றை கும்கி யானைகளை கொண்டு நிரந்தரமாக விரட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், சேதமான பயிர்களுக்கு நிவாரண உதவி வழங்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.