கண்ணமங்கலம்: படவேடு அருகே விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் காட்டு எருமைகளால் விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், படவேடு அருகே ஜவ்வாதுமலை அடிவாரத்தில் மங்களாபுரம், ராமநாதபுரம், துரிஞ்சாபுரம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள விவசாயிகள் வாழை, நெல் உள்ளிட்டவைகளை பயிர் செய்து வருகின்றனர்.இந்நிலையில், இங்குள்ள விவசாய நிலங்களில் காட்டு எருமைகள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகிறது.
இதனால், வருடம் முழுவதும் போராடி பயிர் செய்து அறுவடைக்கு தயாராகும் நேரத்தில் பயிர்களை காட்டு எருமைகள் நாசம் செய்வதால், விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து விவசாயிகளும், பொதுமக்களும் வனத்துறை அதிகாரிகளுக்கு பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே, இனியும் தாமதம் செய்யாமல் வனத்துறையினர் உரிய நடிவடிக்கை எடுக்க வேண்டும். பயிர்களை நாசம் செய்யும் காட்டு எருமைகளை கட்டுப்படுத்த வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.