நடிகர் சிவகார்த்திகேயன், அடுத்ததாக ‘தாய் கிழவி’ படத்தின் இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கும் ‘சேயோன்’ படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுமட்டுமன்றி, வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள தகவலை வெங்கட் பிரபுவே முன்னர் ஒரு மேடையில் அறிவித்திருந்தார்.

சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தைப் பற்றி, கடந்த சில நாட்களாக இணையத்தில் பல்வேறு வதந்திகள் பரவி வந்தன. குறிப்பாக, இப்படம் கைவிடப்பட்டதாகத் தகவல்கள் பேசப்பட்டன.
இது குறித்து நம் சினிமா விகடன் சேனலுக்குப் பேட்டியளித்த சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் தியாகராஜன், இணையத்தில் பரவும் தகவல்கள் அனைத்தும் வதந்தி எனத் தெரிவித்துள்ளார்.
“சிவகார்த்திகேயன் – வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் படத்தின் இறுதி கட்ட ஸ்கிரிப்ட் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. கதையை முழுவதுமாக நானும் வாசித்தேன்.
அதன் இரண்டாம் பாதியில் சில விஷயங்களை மெருக்கேற்றினால் இன்னும் சிறப்பாக இருக்கும் எனக் கருதினோம்.
சிவகார்த்திகேயனும் இதையே ஃபீல் பண்ணினார். அதற்காக வெங்கட் பிரபு கால அவகாசம் கேட்டிருக்கிரார். அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

நாங்கள் இதுவரை திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்கள் பலருடனும் இணைந்து பணியாற்றியுள்ளோம். ஆனால், ஏ.ஆர். ரகுமானுடன் இதுவரை பணியாற்றும் வாய்ப்பு அமையவில்லை.
அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது எங்களது விருப்பம். தற்போது, வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்” எனக் கூறினார்.