திருமலை: ஆந்திராவில் உள்ள அரசு பள்ளியில் நடிகை நித்யாமேனன் மாணவர்களுக்கு ஆங்கில பாடம் எடுத்தார். ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் வரதயாபாளையத்தில் கல்கி பகவானின் ஆசிரமம் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் திரைப்பட நடிகை நித்யாமேனன் தவறாமல் வந்து செல்வது வழக்கம். அதன்படி, இந்தாண்டும் அந்த ஆசிரமத்திற்கு நேற்று முன்தினம் நடிகை நித்யாமேனன் வந்தார்.
அப்போது, அங்கு நடந்த சிறப்பு தியான பயிற்சியில் பங்கேற்றார். தொடர்ந்து, கிருஷ்ணாபுரம் கிராமத்தில் உள்ள பழங்குடியினர் வசிக்கும் பகுதிக்கு சென்றார். அங்குள்ள அரசு தொடக்க பள்ளிக்கு திடீரென சென்ற அவர், மாணவர்களுக்கு ஆங்கில பாடம் சொல்லி கொடுத்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.