கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் பிரிவு தலைவர் குந்தல் கோசை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். மேற்கு வங்க மாநிலத்தில் ஆசிரியர் நியமன ஊழல் வழக்கு தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் பிரிவு தலைவர் குந்தல் கோஷ் வீட்டில் நேற்று முன்தினம் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். இரவு வரை இந்த சோதனை நீடித்தது.
இதில் பல்வேறு ஆவணங்கள் மற்றும் டைரி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை அமலாக்கத்துறை அதிகாரிகளின் விசாரணைக்கு குந்தல் கோஷ் ஒத்துழைப்பு தராததாக கூறி அவரை அதிகாரிகள் கைது செய்தனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் சிபிஐ அதிகாரிகளும் குந்தலுக்கு ஊழல் தொடர்பாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.