விஜய் டிவியில் கடந்த 3 மாதங்களாக ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 6 தமிழ் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவு பெறுகிறது. இதில் பங்கேற்ற 21 போட்டியாளர்களில் விக்ரமன், அசீம் மற்றும் ஷிவின் ஆகியோர் மட்டுமே இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளனர். அவர்கள் மூன்று பேரில் யாரேனும் ஒருவர் மட்டுமே இந்த சீசனின் வெற்றியாளராக இருப்பார். இப்போது வரை மூன்று பேருக்குமான வாய்ப்பு என்பது சரிசமமாகவே சென்று கொண்டிருக்கிறது. அசீம் தன்னுடைய நடவடிக்கைகளால் வெறுப்புகளை சம்பாதித்தாலும், அவர் தன்னுடைய குணத்தை மறைக்காமல் விளையாடியதாக கூறி அவருக்கு பலர் ஆதரவு தெரிவிக்கின்றனர்.
விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகியோர் தங்களுடைய பொறுமை மற்றும் நிதானத்தால் மக்களின் மனதை வென்று இறுதிப்போட்டியில் இப்போது இருக்கின்றனர். இதுஒருபுறம் இருக்க அண்மையில் மிகப்பெரிய பரிசுத் தொகையுடன் வீட்டில் இருந்து வெளியேறிய அமுதவாணனின் ஊதியம் குறித்த தகவல் இப்போது வெளியாகி இருக்கிறது. கடைசி வாரத்தில் இறுதிப்போட்டிக்கு செல்ல விரும்பாதவர்களுக்காக பணப்பெட்டியை எப்போதும் பிக்பாஸ் அனுப்புவார்.
அதன்படி வாரத்தில் முதன்முறையாக அனுப்பப்பட்ட பணப்பெட்டியை உடனடியாக கதிர் எடுத்துக் கொண்டு வெளியேறினார். 3 லட்சம் பரிசுத் தொகை இருந்தபோதே அவர் அந்த பெட்டியை எடுத்ததை பிக்பாஸ் உள்ளிட்ட யாரும் எதிர்பார்க்கவில்லை. இதனால், மிகப்பெரிய டிவிஸ்டாக இரண்டாம் முறையாக பணமூட்டையை பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்தார். இந்தமுறை போட்டியாளர்கள் மிகவும் கவனமாக தொகை அதிகரிக்கட்டும் என பொறுமையாக இருந்தனர். எதிர்பார்த்தது போலவே 11 லட்சங்களை கடந்தவுடன் யாரேனும் ஒருவர் பண மூட்டையை எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 11.75 லட்சம் ரூபாய் வந்தபோது அமுதவாணன் அந்த தொகையை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.
அவருக்கு பிக்பாஸில் இருக்கும் ஒவ்வொரு நாளுக்கும் 25 ஆயிரம் ரூபாய் ஊதியமாக பேசப்பட்டதாக கூறப்படுகிறது. அதனை கணக்கில் எடுத்துக் கொண்டால் 103 நாட்களுக்கும் சேர்த்து 25 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெற வாய்ப்பு இருக்கிறது. அத்துடன் பண மூட்டையில் கிடைத்த 11,75 லட்சம் ரூபாயை சேர்த்து கணக்கிட்டால் ஏறத்தாழ 37 லட்சம் ரூபாய் மொத்தமாக அமுதவாணனுக்கு பிக்பாஸ் வீட்டில் கிடைத்திருக்கும் என கூறப்படுகிறது.