ரஷ்யாவிலிருந்து கோவா வந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: 240 பயணிகள் உயிர் தப்பினர்

பனாஜி:  மாஸ்கோ சர்வதேச விமான நிலையத்திலிருந்து அஷுர் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் 240 பயணிகளுடன் நேற்று முன்தினம் புறப்பட்டது. இது கோவாவின் டபோலிம் விமான நிலையத்தில் நேற்று அதிகாலை 4.15 மணி தரையிறக்க திட்டமிடப்பட்டிருந்தது. அந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக  டபோலிம் விமான நிலைய இயக்குநருக்கு மின்னஞ்சல் மூலம் செய்தி வந்தது. இதையடுத்து அந்த விமானம் இந்திய வான்எல்லைக்குள் நுழைவதற்கு முன்பாகவே உஸ்பெகிஸ்தானுக்கு திருப்பி விடப்பட்டது. அங்கு உஸ்பெகிஸ்தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து இருந்தது.  

விமானம் உஸ்பெகிஸ்தானில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அதிலிருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். ஆனால் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது. ஜனவரி 9ம் தேதி மாஸ்கோவிலிருந்து கோவா வந்த அஷுர் நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் வந்ததையடுத்து, அந்த விமானம் குஜராத் மாநிலம் ஜாம் நகர் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இரண்டு வாரங்களுக்குள் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.