கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கு: ஓபிஎஸ், இபிஎஸ்ஸுக்கு அதிகாரம் இல்லையா?

அதிமுக முன்னாள் எம்.பி. – கே.சி.பழனிச்சாமி, கடந்த 2018ஆம் ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். தனது நீக்கத்தை எதிர்த்து 2021இல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

குறித்த காலத்துக்குள் தாக்கல் செய்யாமல், மூன்று ஆண்டுகளுக்கு பின் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி, கே.சி.பழனிச்சாமி தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து தனி நீதிபதி சி.வி.கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து கே.சி.பழனிச்சாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், கொரோனா தொற்று காலத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கான கால வரம்பை தளர்த்தி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதாகவும், அதன்படி கடந்த 2020 மார்ச் முதல் 2021 அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் வழக்கு தாக்கல் செய்ய முடியாததால், 2021 அக்டோபருக்கு பின் 90 நாட்கள் அவகாசம் வழங்கவும் உச்ச நீதிமன்றம் அவகாசம் அளித்திருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனால் குறித்த காலத்தில் வழக்கு தொடரவில்லை எனக் கூறி தனது மனுவை தள்ளுபடி செய்தது தவறு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அடிப்படை தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கு தன்னை கட்சியில் இருந்து நீக்க அதிகாரமில்லை எனவும் தன்னை நீக்கியது கட்சியின் ஆரம்பகால விதிகளுக்கு முரணானது என்பதால் தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிறப்பிக்கப்பட்ட தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து இந்த மேல் முறையீட்டு மனு 25 நாட்கள் தாமதமாக தாக்கல் செய்துள்ளதால், தாமதத்தை ஏற்று, வழக்கை விசாரணைக்கு பட்டியலிடவும் மேல் முறையீட்டு மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வு, 25 நாட்கள் தாமதத்தை ஏற்று, வழக்கை விசாரணைக்கு பட்டியலிட பதிவுத் துறைக்கு உத்தரவிட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.