தமிழ்நாட்டில் சாதி வாரிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் அதனை முதல்வர் மு.க ஸ்டாலின் பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் பேசியதாவது “தமிழ்நாடு ஆளுநர் தற்பொழுது தனது நிலைபாட்டை மாற்றியுள்ளார். குறிப்பாக டெல்லி சென்று வந்ததிலிருந்து மாநில அரசுக்கு எதிரான போக்கை கடைபிடிக்காமல் அமைதியாக இருக்கிறார்.
கூடிய விரைவில் தமிழக ஆளுநர் மாற்றப்படலாம். அதிமுகவில் நிலவும் உட்கட்சி பூசல் பாஜகவிற்கு சாதகமாக அமைந்துள்ளது அதிமுகவின் இரு அணிகளும் போட்டி போட்டுக் கொண்டு பாஜகவிற்கு காவடி தூக்குகின்றன. பாஜகவை வளர்ப்பது அதிமுகவிற்கு நல்லதல்ல, தமிழ்நாட்டிற்கும் நல்லதல்ல. ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு விசிக பாடுபடும்.
திமுக தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறது. நிறைவேற்றப்படாத தேர்தல் வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துகிறோம். வடமாநிலங்களில் சாதி வாரிய கணக்கெடுப்பு நடத்துவதற்கு குரல் வலுவாக உள்ளது. பீகாரில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு தேவை. அதற்கு திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என செய்தியாளர்கள் சந்திப்பில் வலியுறுத்தியுள்ளார்.