தமிழக அரசின் பராமரிப்பு உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாற்றுத்திறனாளிகள் ஆதார் எண்ணுடன் கூடிய சுயவிவரத்தை சமர்ப்பிக்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அறிவித்துள்ளது. இது குறித்து அத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் “மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை தமிழகஅரசு செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக பராமரிப்பு உதவித்தொகை ரூ.2000 மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகள், குறிப்பாக 75 சதவீதத்திற்கும் மேல் கடும் உடல் பாதிக்கப்பட்டவர்கள், மனவளர்ச்சி குன்றியவர்கள், முதுகு தண்டுவடம், பார்க்கின்சன் நோய், முதுகு தண்டுவட மரப்பு, நாட்பட நரம்பியல் பாதிப்பு, தசை சிதைவு ஆகிய நோய்கள் மற்றும் தொழுநோயால் பாதிப்படைந்தோர் என தமிழக முழுவதும் 2,11,391 நபர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற்று வருகின்றனர்.
இந்த திட்டத்தின் கீழ் பயனடைய 24,951 நபர்களுக்கு தற்பொழுது மாவட்ட உதவித்தொகை வழங்க அரசு நிதி ஒதுக்கீடு செய்து மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மூலம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த திட்டத்தினை முழுமையாக தகுதி உள்ள பயனாளர்கள் பயன்பெறும் வகையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை கீழ் பயன்பெறும் அனைத்து பயனாளர்களும் தங்களுடைய பெயருடன் ஆதார் எண், விலாசம், குறைபாட்டின் தன்மை மற்றும் சதவீதம், தேசிய அடையாள அட்டை எண், வங்கி கணக்கு எண், தொலைபேசி எண் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரின் அலுவலகத்தில் தெரியப்படுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இந்த விவரங்களை விரைவில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திற்கு தெரிவிக்கும் பட்சத்தில் உதவித்தொகை அனைவருக்கும் விரைவில் வழங்கவும், மேலும் உதவித்தொகை வேண்டி விண்ணப்பித்து காத்திருக்கும் அனைவருக்கும் வழங்க ஏதுவாக அமையும். எனவே அரசின் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.