“உங்களை கொலைசெய்ய ஒரு க்ரூப் திட்டம் தீட்டியிருக்கு” – ராம் கோபால், ராஜமௌலிக்கு வார்னிங்!

பொறாமை காரணமாக உங்களை கொலைசெய்ய திரையுலகினர் திட்டமிட்டுள்ளதால், உங்களின் பாதுகாப்பை பலப்படுத்திக் கொள்ளுங்கள் என்று இயக்குநர் ராம்கோபால் வர்மா, எஸ்.எஸ்.ராஜமௌலிக்கு அறிவுரை கூறுவதுபோல் ட்வீட் செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

‘சிவா’, ‘சத்யா’, ‘ரங்கீலா’, ‘கம்பெனி’ உள்ளிட்ட பலப் படங்களை இயக்கியவர் இயக்குநர் ராம் கோபால் வர்மா. தெலுங்கு, இந்தி மொழிகளில் அதிகப் படங்களை இயக்கியுள்ள இவரின் படங்கள் எல்லாம் சர்ச்சையை கிளப்புவதுபோல், ராம் கோபால் வர்மா பேசுவது அல்லது ட்வீட் செய்வதும் சர்ச்சையை கிளப்பும். அந்த வகையில், எஸ்.எஸ்.ராஜமௌலியை பாராட்டுவதாக நினைத்து ட்வீட் மூலம் பகீர் கிளப்பியுள்ளார் ராம் கோபால் வர்மா.

இயக்குநர் ராஜமௌலியின் ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தின் ‘நாட்டுக்கூத்து’ பாடல் சமீபத்தில் கோல்டன் குளோப் விருதை வென்றது. இதேபோல் வெளிநாட்டுப் பிரிவில் சிறந்தப் படம் மற்றும் சிறந்தப் பாடல் பிரிவில் ‘நாட்டுக்கூத்து’ பாடலும் ஆகியவற்றுக்கான கிரிட்டிக் சாய்ஸ் விருதையும் ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் வென்று சாதனைப் படைத்தது. இதனைத் தொடர்ந்து இன்று மாலை அறிவிக்கப்பட உள்ள 95-வது ஆஸ்கருக்கான இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் 6 பிரிவுகளில் ‘ஆர்ஆர்ஆர்’ படம் தேர்வாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ராம் கோபால் வர்மா, தனது ட்விட்டர் பக்கத்தில் 3 பதிவுகளை இட்டுள்ளார். அதில் முதல் ட்வீட்டில் ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனுடன், ராஜமௌலி கிரிட்டிக் சாய்ஸ் விருது விழாவில் உரையாடிய வீடியோவைப் பகிர்ந்து, “தாதா சாஹப் பால்கே முதல் இன்று வரை, இந்திய சினிமா வரலாற்றில் ராஜமௌலி உட்பட யாரும் இந்த அற்புதமான தருணத்தை ஒரு இந்திய இயக்குநர் கடந்து செல்வார் என்று நினைத்துப் பார்த்திருக்க முடியாது” என்று பாராட்டியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து இரண்டாவது ட்வீட்டில், “mughal e azam படத்தை இயக்கிய கே. ஆசீப், ‘ஷோலே’ படத்தை இயக்கிய ரமேஷ் சிப்பி போன்ற திரைப்பட ஜாம்பவான்கள் மற்றும் ஆதித்ய சோப்ராக்கள், கரண் ஜோகர்கள், பன்சாலிக்கள் உள்ளிட்ட இயக்குநர்களையும் எல்லாம் நீங்கள் (ராஜமௌலி) மிஞ்சிவிட்டீர்கள். அதற்காக உங்களை வணங்குகிறேன்” என்று கூறியுள்ளார்.

தனது 3-வது ட்வீட்டில் அவர் கூறியுள்ளதுதான் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதில், “நான் உட்பட பொறாமை கொண்ட திரைப்பட தயாரிப்பாளர்கள் உங்களைக் கொலைச் செய்ய ஒரு குழுவை உருவாக்கியுள்ளதால், நீங்கள் (ராஜமௌலி) உங்கள் பாதுகாப்பை பலப்படுத்திக்கொள்ளுங்கள். அதில் நானும் ஒரு பகுதி” என்று குறிப்பிட்டுள்ளார். நகைச்சுவையாக கூறுவதாக நினைத்து அவர் இவ்வாறு கூறியுள்ளது சற்று ராஜமௌலியின் ரசிகர்களை ஆதங்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.