ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேராக கடந்த ஜனவரி 4ம் தேதி மாரடைப்பால் உயிரிழந்ததை அடுத்து ஈரோடு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் ஜனவரி 31ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 7ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
வேட்புமனு மீதான பரிசீலனை வரும் பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெற உள்ளது. பிப்ரவரி 10ஆம் தேதி வேப்பமனு திரும்ப பெற கடைசி நாளாகும். வேட்புமனு தாக்களுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதிக்கான தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பொருத்தவரை 500 மின்னணு வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதனால் 500 கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் 500 விவி பேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் பொழுது கொரோனா பரவல் காரணமாக வாக்குப்பதிவு செய்வோர் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அதேபோன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் வாக்களிக்க பிரத்தியேக ஆடை அணிவிக்கப்பட்டு மாலை 6 மணி முதல் 7 மணி வரை வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். இதன் காரணமாக வாக்கு செலுத்தும் நேரம் காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நடைபெற்றது. தற்பொழுது கொரோனா பரவல் இல்லாத காரணத்தால் கடந்த முறை 350 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்ட நிலையில் தற்போது 238 வாக்குச்சாவடி மையங்கள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் விரைவான வாக்கு பதிவுக்காக கொரோனா பரவலுக்கு முன் இருந்தது போல் காலை 7 மணி முதல் மாலை 6 மணிக்கு வரை மட்டுமே வாக்குப்பதிவு நேரத்தை அனுமதிக்க வேண்டும் என தேர்தல் நடத்தும் அதிகாரி தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளார். கூடிய விரைவில் தேர்தல் ஆணையம் இதற்கான அறிவிப்பை வெளியிடும் என தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் குறைக்கப்பட வாய்ப்புள்ளது.