சர்க்கரை நோய் பாதிப்பால் 8 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வெளிப்பாளையம் காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த தம்பதியினர் பால்ராஜ் – கார்த்திகா. இந்த தம்பதியினருக்கு 3 வயதில் ரூபி என்ற மகளும், மரியா ஆரோனிகா என்ற 8 மாத குழந்தையும் இருந்துள்ளனர்.
இதில் இரண்டாவது குழந்தை மரியா ஆரோனிக்காவுக்கு கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து குழந்தையை பெற்றோர் நாகப்பட்டினம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு குழந்தையை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் ஆரோனிக்காவுக்கு சர்க்கரை நோய் இருப்பது தெரியவந்தது. இதனை அறிந்த பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து நாகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தனி மருத்துவக் குழுவினர், ஆரோனிக்காவுக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி 8 மாத குழந்தை சர்க்கரை நோயால் பரிதாபமாக உயிரிழந்தார்.