2016 சட்டமன்ற தேர்தலில் பணப்பட்டுவாடா – மாஜி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழக்கு

2016 சட்டமன்ற தேர்தலில் பணப்பட்டுவாடா செய்வதற்காக சேகர் ரெட்டியின் நிறுவனத்திடம் 7 கோடி ரூபாய் கொடுத்ததாக கூறி வருமான வரித் துறையின் நடவடிக்கையை எதிர்த்து அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அரசு ஒப்பந்ததாரரான சேகர் ரெட்டியின் எஸ்.ஆர்.எஸ். மைனிங் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அதில் கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் 2016 ஆம் ஆண்டில் நடந்த பொதுத் தேர்தலில் பல்வேறு தொகுதிகளுக்கு பகிர்ந்தளிப்பதற்காக 7 கோடி ரூபாயை அப்போதைய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, எஸ்.ஆர்.எஸ். நிறுவனத்திற்கு வழங்கியது தெரியவந்தது.

இதை அடுத்து 2017 – 18 ஆம் நிதியாண்டில் தனக்கு 4 லட்சத்து 92 ஆயிரத்து 563 ரூபாய் மட்டுமே வருமானம் என வேலுமணி தாக்கல் செய்த கணக்கை மறு ஆய்வு செய்து, 7 கோடி ரூபாய்க்கு எந்த விளக்கமும் வழங்கவில்லை எனக் கூறி வருமான வரித் துறை கடந்த ஆண்டு ஜூன் மாதம் நோட்டீஸ் அனுப்பியது.

அதற்கு வேலுமணி தரப்பில் விளக்கம் அளித்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 9 ஆம் தேதி 2017 – 18 ஆம் நிதியாண்டில் வேலுமணியின் மொத்த வருமானம் 7 கோடியே 4 லட்சத்து 66 ஆயிரத்து 770 என நிர்ணயித்து வருமான வரித் துறை உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டுமெனவும், தடை விதிக்க வேண்டுமெனவும், இந்த உத்தரவின் அடிப்படையில் வருமான வரி வசூலிக்க தடை விதிக்க வேண்டுமெனவும் வேலுமணி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அந்த மனுவில், வருமான வரித் துறை தரப்பு சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்கப்படவில்லை என்றும், நடைமுறைகளையும் இயற்கை நீதியையும் பின்பற்றப்படவில்லை என்றும், அளித்த விளக்கத்தை முறையாக பரிசீலிக்கவில்லை என்றும் வருமான வரித் துறை மீது குற்றம் சாட்டி உள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், வருமான வரித் துறை பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை பிப்ரவரி 27 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.