ஏர் இந்தியா விமானத்தில் சிறுநீர் கழித்த வழக்கு: ஷங்கர் மிஸ்ராவுக்கு ஜாமின்!

ஏர் இந்தியா விமானத்தில், பெண் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஷங்கர் மிஸ்ராவுக்கு ஜாமின் வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையத்தில் இருந்து தலைநகர் டெல்லிக்கு, ஏர் இந்தியா விமானம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் தேதி புறப்பட்டது. அப்போது, சக பயணி ஒருவர் குடி போதையில், அதே வகுப்பில் பயணித்துக் கொண்டிருந்த 70 வயது மூதாட்டியின் இருக்கை அருகே நின்று அவர் மீது சிறுநீர் கழித்துள்ளார். இந்த விவகாரம் கடந்த மாதம் வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பான விசாரணையில், பெண் மீது சிறுநீர் கழித்த நபர் மகாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த ஷங்கர் மிஸ்ரா, 34, என்பது தெரிய வந்தது. இதை அடுத்து ஏர் இந்தியா விமானத்தில் அவர் பயணிக்க 4 மாதங்கள் தடை விதித்து சம்பந்தப்பட்ட நிறுவனம் உத்தரவிட்டது.

இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய டெல்லி போலீசார், கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரில் தலைமறைவாகி இருந்த ஷங்கர் மிஸ்ராவை கடந்த 7 ஆம் தேதி கைது செய்தனர். சம்பவம் நடைபெற்ற 6 வாரங்களுக்கு பிறகு கைது செய்யப்பட்ட அவர், நீதிமன்றக் காவலில் 14 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் ஜாமின் கோரி ஷங்கர் மிஸ்ரா தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமின் கோரி, ஷங்கர் மிஸ்ரா தரப்பில் மீண்டும் டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த டெல்லி நீதிமன்றம், ஷங்கர் மிஸ்ராவுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.