எடப்பாடி களமிறக்கிய 4 ஸ்பெஷல் டீம்… ஈரோடு கிழக்கில் அதிமுகவின் சீக்ரெட் மூவ்!

காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் ஈவேரா மறைவும், பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிப்பும் சற்று எதிர்பாராதவை. இதையொட்டி தமிழ்நாடு அரசியல் களம் தீயாய் வேலை செய்து கொண்டிருக்கிறது.
திமுக
கூட்டணி சார்பில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு சீட்டை விட்டுக் கொடுத்து விட்டனர். அதன்பிறகு வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், கூட்டணி கட்சிகளின் ஆதரவு, பிரச்சாரம், தேர்தல் பணிமனை திறப்பு என ஆளுங்கட்சி தரப்பு வேகமாக செயல்பட்டு வருகிறது.

உட்கட்சி பூசல்

நாளைய தினம் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்புமனு தாக்கல் செய்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மறுபுறம் அதிமுக தரப்பில்
எடப்பாடி பழனிசாமி
, ஓ.பன்னீர்செல்வம் என இருவருமே வேட்பாளர்களை நிறுத்தியது தான் ஹைலைட். ஒரே கட்சியில் இரண்டு வேட்பாளர்கள். தொண்டர்கள் குழப்பத்தில் இருந்தாலும் ஏற்கனவே தங்கள் தலைவர் யார் என முடிவு செய்து வைத்திருப்பதால் அவர்கள் நிறுத்திய வேட்பாளருக்கு வாக்களிக்கவே விரும்புவர்.

இரட்டை இலை முடக்கம்

இதில் சின்னம் கிடைப்பது குதிரை கொம்பாக இருக்கிறது. எப்படியும் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி விடும் என சாமானியர்கள் கூட பேசும் அளவிற்கு மாறிவிட்டது. இரண்டு தரப்பும் ஒரே சின்னத்தை கேட்டால் என்ன செய்ய முடியும்? ஆளுக்கொரு சுயேட்சை சின்னம் கொடுத்து அனுப்பி வைக்க வேண்டியது தான்.

நள்ளிரவு மீட்டிங்

இந்நிலையில் கடந்த ஜனவரி 30ஆம் தேதி இரவு ஈரோட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த லேட் நைட் மீட்டிங் குறித்து பலவிதமான தகவல்கள் வெளியாகி வருகின்றன. சுமார் 10.30 மணிக்கு தொடங்கிய கூட்டம் நள்ளிரவு 12 மணி வரை நீடித்துள்ளது. அதில் திமுகவின் திட்டம் எவ்வாறு இருக்கும் என்பது பற்றி எடப்பாடி பழனிசாமி விளக்கியுள்ளார். செங்கோட்டையன் நமது பலம்.

முக்கிய புள்ளிகள்

அவரை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். முதலில் தேர்தல் பணிக்குழுவில் இடம்பெற்ற பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். பின்னர் முக்கியமான சிலரை மட்டும் வைத்து கொண்டு ரகசியமாக ஆலோசனையில் ஈடுபட்டதாக தெரிகிறது. அதில், திமுகவின் ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்க வேண்டும்.

ரகசிய அசைன்மென்ட்

குறிப்பாக திமுக அமைச்சர்கள் கே.என்.நேரு, செந்தில் பாலாஜி என இருவரையும் கட்டம் கட்டி செயல்பட்டாலே போதும். அதற்கேற்ப நாமும் களத்தில் காய்களை நகர்த்தலாம் என முடிவு செய்துள்ளனர். இதையொட்டி மொத்தம் 4 குழுக்களாக பிரிந்து செயல்படுவோம்.

முதல் குழு – திமுகவின் செயல்பாடுகளை கவனிக்க,இரண்டாவது குழு – திமுக கூட்டணிக்கு பலமாக இருக்கும் வாக்கு வங்கியை லிஸ்ட் போடுவது மற்றும் அதை அதிமுக பக்கம் திருப்பும் வேலைகளில் ஈடுபட,மூன்றாவது குழு – வாக்காளர்களுக்கு திமுக பணம் கொடுப்பதை கண்டுபிடிக்க,நான்காவது குழு – மக்களின் மனநிலையை அறிந்து வாக்கு சேகரிக்க,

இந்த நான்கு குழுக்களும் சேகரிக்கும் தகவல்கள் முற்றிலும் உண்மையாக இருக்க வேண்டும். கொஞ்சம் பிசகினாலும் அப்புறம் விஷயம் நமக்கு எதிராக திரும்பிவிடும். நாம் செய்யும் செயல்பாடுகள் மிகவும் கச்சிதமாக இருக்க வேண்டும் என அறிவுரைகள் வழங்கப்பட்டிருக்கிறதாம். அதுமட்டுமின்றி பாஜக தரப்பை ஓரங்கட்டி விட்டு தனியாக களமிறங்கி இருப்பதால் எடப்பாடிக்கு ரொம்பவே தைரியம் தான் என்கின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.