சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக மத்திய அரசு வழக்கறிஞர் விக்டோரியா கவுரியை நியமிக்க எதிர்ப்பு தெரிவித்து குடியரசு தலைவருக்கு மூத்த வழக்கறிஞர்கள் கடிதம் எழுதி உள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நீதிபதிகளாக நியமிக்க 8 பேரின் பெயர்களை சமீபத்தில் உச்ச நீதிமன்ற கொலிஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. அந்த பட்டியலில் 5 மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் மூன்று நீதித்துறை அலுவலர்களை நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்தது.
இந்திய பட்டியலில் இடம் பெற்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மத்திய அரசு வழக்கறிஞராக இருக்கும் விக்டோரியா கவுரி பெயரும் இடம் பெற்றிருந்தது. இவர் சிறுபான்மை இன மக்களுக்கு எதிராகவும் இந்துத்துவா கொள்கைகளுக்கு ஆதரவாகவும் செயல்பட்டதாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில் “நாட்டின் சிறுபான்மையினர் மக்களுக்கு எதிராக பல்வேறு வெறுப்பு கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான பேச்சுக்கள் இன்னும் யூட்யூப்பில் இருக்கிறது. இவர் ஏற்கனவே பாஜகவின் தேசிய மகளிர் அணியின் தேசிய பொதுச் செயலாளராகவும் இருந்துள்ளார்.
இவர் பாரதிய ஜனதா கட்சிக்கும் கொள்கைக்கும் விசுவாசமாக இருந்து வருகிறார். நாட்டின் சிறுபான்மையின மக்களுக்கு எதிராக பேசிய விக்டோரியா கவுரி நீதிபதியாக நியமிக்க எவ்வாறு பரிந்துரைக்கப்பட்டார் என்பதை விளக்கம் அளிக்க வேண்டும்” என கோரிக்கையாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறுபான்மையின மக்களுக்கு எதிராக பேசிய முன்னாள் பாஜக நிர்வாகி ஒருவரை சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.