மாட்டு இறைச்சி வைத்திருந்ததாக முதியவர் அடித்துக்கொலை – அதிர்ச்சி சம்பவம்

பாட்னா,

பீகார் மாநிலம் சிவான் மாவட்டம் ஹசன்புர் கிராமத்தை சேர்ந்த 55 வயது முதியவர் நசீம் குரேஷி. இவர் கடந்த செவ்வாய்கிழமை தனது உறவுக்கார இளைஞர் பேரோஷ் குரேஷி என்பவருடன் அருகில் உள்ள ஜோகியா கிராமத்திற்கு சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, ஜோகியா கிராமத்தில் இஸ்லாமிய மத வழிபாட்டு தலம் அருகே நசீம், போரோஷ் ஆகியோரை ஒரு கும்பல் இடைமறித்தது. மேலும், மாட்டு இறைச்சி வைத்திருந்ததாக சந்தேகமடைந்து இருவரிடமும் அந்த கும்பல் வாக்குவாதத்தில் ஈடுபட்டது.

வாக்குவாதம் முற்றிய நிலையில் தாங்கள் வைத்திருந்த உருட்டு கட்டையால் அந்த கும்பல் நசீம், போரோஷ் மீது கடுமையாக தாக்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த போரோஷ் அந்த கும்பலிடமிருந்து தப்பியோடினார்.

ஆனால், நசீமை சுற்றி வளைத்த அந்த கும்பல் கடுமையாக தாக்கி பின்னர் அவரை போலீசிடம் ஒப்படைத்தனர். படுகாயங்களுடன் போலீசிடம் ஒப்படைக்கப்பட்ட நசீமை போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதியவர் நசீம் குரேஷி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் மாட்டு இறைச்சி வைத்திருந்ததாக சந்தேகத்தில் முதியவரை அடித்துகொன்ற சுஹில் சிங், ரவி ஷா, உஜ்வால் சர்மா ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.