அதிமுக எம்.பி சி.வி.சண்முகத்தின் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது ஏன்? – உயர் நீதிமன்றத்தில் காவல் துறை விளக்கம்

சென்னை: அதிமுக எம்.பி சி.வி.சண்முகத்துக்கான பாதுகாப்பை மறு ஆய்வு செய்தபோது, அவருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்பது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் அவருடைய பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல் துறை தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.பியுமான சி.வி.சண்முகம் கடந்த ஆண்டு தாக்கல் செய்திருந்த மனுவில், “கடந்த 2006-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் அன்று, என் வீட்டில் நுழைந்த மர்ம கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தியதில், எனது மைத்துனர் கொல்லப்பட்டார். அதன்பின் தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. ஆனால், கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் திடீரென அந்த பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது. எனது துப்பாக்கி உரிமத்தையும் புதுப்பித்து தரவில்லை.

தற்போது 2006-ல் நடந்த சம்பவம் தொடர்பான வழக்கு சாட்சி விசாரணை கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.பாதுகாப்பை விலக்கியதற்கான காரணத்தை தனக்கு தெரிவிக்க வேண்டும். எனக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும் 2021-ம் ஆண்டு நவம்பர் மாதமும், கடந்த ஆண்டு ஜனவரி மாதமும் அளித்த மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்” என மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் காவல் துறை பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி ஜெயசந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சி.வி.சண்முகம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.எஸ்.தினகரன், “சமூக வலைதளங்கள் மற்றும் செல்போன் அழைப்புகள் மூலம் கொலை மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல்கள் வருகின்றன. இதுதொடர்பாக அளித்த புகாரில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், எந்தவித முகாந்திரமும் இல்லை எனக் கூறி புகாரை காவல் துறையினர் முடித்துவைக்கின்றனர்” என்று தெரிவித்தார்.

அப்போது காவல் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பாபு முத்து மீரான், “சி.வி.சண்முகத்துக்கான பாதுகாப்பை மறு ஆய்வு செய்தபோது, அவருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்பது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் அவருடைய பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது” என்று தெரிவித்தார் .

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, சி.வி.சண்முகத்தின் பாதுகாப்பு தொடர்பாக எடுக்கபட்ட நடவடிக்கை குறித்த நிலை அறிக்கையை தாக்கல் செய்ய காவல் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 27-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.